தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் காட்டும் சூழல் ஏற்பட்டுள்ளது. நாளை முதல் 4ஆம் தேதி வரை தமிழகத்தில் பல இடங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தெற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேற்கு திசை காற்றின் வேகத்திலும் மாறுபாடு உள்ளது. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த ஒரு வாரத்துக்கு பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழை மற்றும் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இன்று சென்னை உள்ளிட்ட சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நாளை நீலகிரி, கோவை, கடலுார், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் ஜூலை 3ஆம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், நீலகிரி, கோவை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஜூலை 4ஆம் தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழையும் திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டிய வங்க கடல் பகுதிகள், மாலத்தீவு, லட்சத்தீவு, கேரள, கர்நாடக கடலோர பகுதிகளில் மணிக்கு 65 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசுகிறது. வரும் 4ஆம் தேதி வரை இந்த நிலை நீடிக்கும். எனவே, மீனவர்கள் வரும் 4ஆம் தேதி வரை இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
தென் மேற்கு பருவமழை ஜூன் 8ஆம் தேதி துவங்கிய நிலையில், தமிழகத்தில் தீவிரம் அடையவில்லை. அதேபோல் கேரளா, கர்நாடகாவிலும் பருவமழை இன்னும் தீவிரம் காட்டவில்லை. அதனால், பருவ மழையால் நீராதாரம் பெறும் 27 அணைகள் நீரின்றி வறண்டு கிடக்கின்றன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள குற்றாலம் உள்ளிட்ட பல்வேறு நீர் வீழ்ச்சிகளிலும், ஆறுகளிலும் இன்னும் தேவையான அளவுக்கு நீர்வரத்து இல்லை. தற்போதைய நிலையில், மேற்கு திசை காற்று வலுவாகி கேரளா, கர்நாடகா பகுதிகளிலும் அதையொட்டிய தமிழக மாவட்டங்களிலும் பருவமழை தீவிரமாகும் வாய்ப்புள்ளதால் நீர்நிலைகளுக்கான நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.