கல்வி உதவித்தொகையுடன் முதுநிலை தமிழ் படிப்பில் சேர மாணவர்கள் ஜூலை 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து உலக தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; இந்த நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் 5 ஆண் கால ஒருங்கிணைந்த முதுநிலை தமிழ் பட்டப் படிப்பு, முதுநிலை தமிழ் பட்டப் படிப்பு மற்றும் தமிழ் முனைவர் பட்டம் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இந்த படிப்புகள் தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தின் ஏற்புடன் நடத்தப்படுகின்றன. இதில் முதுநிலை தமிழ் (2 ஆண்டு) படிப்புக்கான வரும் கல்வியாண்டு ( 2025-26 ) மாணவர் சேர்க்கை தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பப் படிவங்களை இளநிலை பட்டம் முடித்தவர்கள் www.ulakaththamizh.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேரிலும் பெற்றுக் கொள்ளலாம். எம்.ஏ தமிழ் படிப்பில் சேரும் மாணவர்களில் தேர்வின் அடிப்படையில் 15 பேருக்கு மாதந்தோறும் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும். இந்தக் கல்வி நிறுவனத்தில் ஆண், பெண் இரு பாலருக்கும் தனித்தனி இலவச விடுதி வசதி உள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களுடன், ‘இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில் நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை – 600 113’ என்ற முகவரியில் ஜூலை 4-ம் தேதிக்குள் நேரில் அல்லது தபாலில் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்கள் அறிய 044 – 2254 2992 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More: இன்று உலக காற்று தினம் 2025!. காற்று மாசுபடுவதை எவ்வாறு தவிர்ப்பது?.