சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த வசந்தி என்பவருக்கு திருமணம் ஆவதற்கு முன்னதாகவே குழந்தை பிறந்ததால் வசந்தியின் தாய் விஜயாவும், ஜெயராஜ் என்பவரும் இணைந்து பச்சிளம் குழந்தையை கொலை செய்து சில்வர் பாத்திரத்தில் அடைத்து குப்பைத் தொட்டியில் வீசியதாக புகார் எழுந்தது.
குப்பை தொட்டியை சுத்தம் செய்த ஊழியர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்திய கிண்டி காவல்துறையினர், வசந்தி விஜயா ஜெயராஜ் உள்ளிட்ட 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். அதோடு ஜெயராஜுடன் ஏற்பட்ட காதலால் தான் கர்ப்பமானதாக வசந்தி ஜெயராஜ் மீது குற்றம் சுமத்தி இருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை சென்னை அல்லி குளத்தில் இருக்கின்ற மகளிர் நீதிமன்ற நீதிபதி முகமது ஃபாரூக் முன்னிலையில், நடைபெற்றது. அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆர்த்தி ஆஜராகி வாதிட்டபோது விசாரணை நடைபெற்ற சமயத்தில் சேகரிக்கப்பட்ட சாட்சியங்களை சமர்ப்பித்துள்ளார். அதோடு குற்றம் சுமத்தப்பட்டுள்ள விஜயா, வசந்தி உள்ளிட்டோர் இணைந்து பெண் குழந்தையை கொலை செய்திருப்பதாகவும் ஒப்புக்கொண்டனர் என்றும் வாதம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி குழந்தையை கொலை செய்த வழக்கில் வசந்தி மற்றும் விஜயா மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 5000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். அதோடு, வசந்தி ஜெயராஜ் காதலித்ததாக தெரிவிப்பதை சந்தேகத்திற்கு இடமில்லாமல் காவல்துறையினர் தரப்பில் நிரூபிக்கவில்லை. டிஎன்ஏ பரிசோதனையில் குழந்தை ஜெயராஜுடையது இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. ஆகவே இந்த வழக்கில் இருந்து அவரை விடுதலை செய்தும் நீதிபதி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.