மும்பை அருகே புறநகர் ரயிலில் இருந்து பயணிகள் விழுந்து 1 பேர் பலி, 9 பேர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் தானேயில் திங்கள்கிழமை மும்ப்ரா-சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் (CSMT) விரைவு புறநகர் ரயிலில் இருந்து கீழே விழுந்ததில் 1 பயணி உயிரிழந்தார். என்றும் 9 பேர் காயமடைந்தனர் என்று தானே நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.
முதற்கட்ட தகவலின்படி, மும்ப்ரா ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து சுமார் 10-15 பயணிகள் ரயில் பாதையில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இந்த துயர சம்பவத்திற்குப் பிறகு ரயில்வே மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காயமடைந்த பயணிகள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவ வசதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
பயணிகள் கதவுகளில் தொங்கிக் கொண்டே பயணம் செய்ததாகவும், ரயிலில் அதிக கூட்டம் இருந்ததால் விழுந்ததாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது விசாரணை நடந்து வருகிறது.. இந்த சம்பவம் காரணமாக உள்ளூர் சேவைகள் பாதிக்கப்பட்டன. இந்த சம்பவம் பீக் ஹவர்ஸ் எனப்படும் உச்ச நேரத்தில் நடந்ததால், பயணிகள் மத்தியில் பீதி ஏற்பட்டது.
மத்திய ரயில்வே இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் .”தானேவின் மும்ப்ரா ரயில் நிலையத்தில் சிஎஸ்எம்டி நோக்கி பயணித்த சில பயணிகள் ரயிலில் இருந்து விழுந்தனர். ரயிலில் அதிக கூட்டம் இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.. ரயில்வே நிர்வாகமும் காவல்துறையும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். விபத்து குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் உள்ளூர் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக கூட்ட நெரிசல் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது, பல பயணிகள் பயணிக்கும் போது ரயில் கதவுகளுக்கு அருகில் தொங்கிக் கொண்டிருந்தனர். அதைத் தொடர்ந்து, மத்திய பாதையில் உள்ளூர் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
முதல்வர் ஃபட்னாவிஸ் இரங்கல்
இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு மகாராஷ்டிரா முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திவா-மும்ப்ரா நிலையத்திற்கு இடையே ஒரு உள்ளூர் ரயிலில் இருந்து மொத்தம் 8 பயணிகள் விழுந்து, அவர்களில் சிலர் உயிரிழந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அவர்களுக்கு எனது மனமார்ந்த அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது குடும்பத்தினரின் துயரத்தை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்.
காயமடைந்தவர்கள் உடனடியாக சிவாஜி மருத்துவமனை மற்றும் தானே பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்ளூர் நிர்வாகம் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. காயமடைந்தவர்களுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்க கடவுளை பிரார்த்திக்கிறேன். இந்த சம்பவத்திற்கான சரியான காரணம் குறித்து ரயில்வே துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.