ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டபட்டு சமீபத்தில் விடுவிக்கப்பட்ட நளினியின் கணவர் முருகன் வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நளினி அவரது கணவர் முருகன் உள்பட 6 பேர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைவாசம் இருந்தனர். இத்தனை ஆண்டுகள் கழித்து சமீபத்தில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஒருபுறம் நளினிக்கு இது மகிழ்ச்சியை தந்தாலும் தன் கணவர் முருகன் திருச்சி அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டது வேதனை அளிக்கின்றது என்று பல பேட்டிகளில் தெரிவித்தார். இந்நிலையில் வேலூர் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு முருகன் திருச்சியில் இருந்து அழைத்துவரப்பட்டார்.
கடந்த 2020ம் ஆண்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது பெண் சிறை அதிகாரிகளிடம் அநாகரீகமாக நடந்துகொண்டார் என அவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. எனவே அந்த வழக்கின் விசாரணைக்காக அவர் வேலூர் சத்துவாச்சாரியில் அமைந்துள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சியில் இருந்து அழைத்துவரப்பட்டு வேலூரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் மீண்டும் அவரை அகதிகள் முகாமுக்கே அழைத்துச் சென்றனர். அப்போது காட்பாடியில் உள்ள வீட்டில் தங்கி இருக்கும் நளினி அவரது கணவர் முருகனை சந்தித்து பேசினார்.