உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த புடான்சிங் தோமர் என்பவரின் 20 வயது மகளும், அதே கிராமத்தைச் சேர்ந்த ரூப் சந்திரா மௌரியா என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். இதில், ரூப்சந்திரா வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனால், இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி, இளம்பெண்ணை காஜியாபாத்திற்கு அழைத்துச் சென்று ரூப் சந்திரா திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு சில நாட்களுக்கு பிறகு அவர்கள் மீண்டும் சீதாப்பூருக்கு தம்பதியராகத் திரும்பி தனியாக வீடு எடுத்து வசித்துள்ளனர்.
தனது பெண்ணை வேறு சாதியைச் சேர்ந்தவர் திருமணம் செய்து கொண்டது மட்டுமல்லாமல், தான் வசிக்கும் ஊரிலேயே தனியே வீடு எடுத்து தங்கியிருந்ததைக் கண்டு மகளின் தந்தை தோமர் கடும் ஆத்திரம் அடைந்தார். இதனால், மகளை கொலை செய்ய வேண்டும் என்று குடும்பத்தினருடன் திட்டமிட்டார். அதன்படி, ரூப்சந்திரா வீட்டில் இருந்து வெளியே சென்றிருந்த போது, அவரது வீட்டுக்குள் பெண்ணின் தாய்மாமனும், சகோதரனும் புகுந்தனர். பின்னர் இளம்பெண்ணை வெளியே இழுத்து வந்து இருவரும் கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகணவர் குறித்து ரூப் சந்திரா குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி இளம்பெண்ணின் மாமா, அவரது மகன் ஆகியோரை கைது செய்துள்ளனர். இது ஆணவப் படுகொலை என சீதாப்பூர் காவல் கண்காணிப்பாளர் நரேந்திர பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்.