பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகரில் சீக்கியர்களின் புனித கோவிலான பொற்கோவில் இருக்கும் பகுதியருகே தெரு ஒன்றில் ஹர்மன்ஜீத் சிங் (20) என்ற இளைஞர் தனது மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டு இருந்துள்ளார். சாத்திவிந்த் பகுதியில் உள்ள இவர், புகையிலையை மென்று கொண்டும், குடிபோதையில் அந்த பகுதியில் சுற்றி திரிந்துள்ளார் என கூறப்படுகிறது. இதனால், நிஹாங் சீக்கியர்கள் இருவர் நேற்று நள்ளிரவில் அவரிடம் சென்றுள்ளனர். இந்த சீக்கியர்கள் மற்ற சீக்கியர்களிடம் இருந்து மாறுபட்டவர்கள். இவர்களுக்கென ஒரு கட்டமைப்புடன் உள்ளவர்கள்.
போரின்போது, குரு கோவிந்த் சிங் அணிந்தது போன்ற நீல வண்ண உடைகளை அணியும் வழக்கம் கொண்டவர்கள். இவர்கள் புகை பிடிப்பது கிடையாது. தங்களது பார்வையில் படும் புகைப்பிடிப்பவர்களையும் இவர்களுக்கு பிடிக்காது. என்பன போன்ற பல தனிப்பட்ட கொள்கைகளை கொண்டவர்கள். இந்நிலையில், இவர்கள் அந்த வாலிபரை நெருங்கியபடி வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, நிஹாங் சீக்கியர் ஒருவர் தன்னிடம் இருந்த வாள் ஒன்றை எடுத்து அவரை நெருங்குகிறார். இதனை கவனித்த வாலிபர், அவரிடம் திரும்பி வாக்குவாதம் செய்கிறார். அவர்கள் இதுபற்றி ஹர்மன்ஜீத்திடம் வாக்குவாதம் செய்தனர். அவர்களுக்குள் திடீரென கைகலப்பு ஏற்படுகிறது. இதில், ஒருவரையொருவர் தாக்கி கொள்கின்றனர்.
சம்பவ பகுதியில் நின்றிருந்த மூன்றாவது சீக்கியர் ஒருவர் அந்த வாலிபரை கடுமையாக தாக்குகிறார். இதில், காயமடைந்த அந்த இளைஞர் தெருவோரம் விழுந்து விட்டார். தொடர்ந்து அவர் மீது தாக்குதல் நடத்துகின்றனர். அதன்பிறகு, காயங்களுடன் எழுந்து நிற்கும் அந்த இளைஞர் அந்த பகுதியில் இருந்து நடந்து செல்கிறார். இந்த காட்சிகள் அங்கிருந்த ஹோட்டல் ஒன்றில் இருந்த சி.சி.டி.வி. காட்சியில் பதிவாகி உள்ளன. இந்நிலையில் அந்த பகுதியில் நேற்று இரவு முழுவதும் அந்த இளைஞருடன் உடல் கிடந்துள்ளது. காலையில் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வந்த பிறகே இளைஞர் உயிரிழந்த சம்பவம் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து காவல் ஆணையாளர் அருண்பால் சிங் கூறும்போது, சம்பவம் நிகழ்ந்த போது 6 முதல் 7 பேர் அந்த பகுதியில் நின்றிருந்தனர். ஆனால், ஒருவர் கூட எங்களை அழைக்கவில்லை என்பது வெட்கக்கேடானது என்று கூறியுள்ளார். ஹர்மன்ஜீத் சிங்கின் தாயார் கூறும்போது, விரைவில் வெளிநாட்டுக்கு செல்லும் முடிவுடன் தனது மகன் இருந்த விவரங்களை கூறிய பின்பு அவரால் எதுவும் பேச முடியவில்லை. இந்த சம்பவத்தில் ரமன்தீப் சிங் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். மற்ற இருவரை தேடி வருகின்றனர். புகையிலையை மென்று பொற்கோவில் பகுதியருகே துப்பிய விவகாரத்தில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.