வழுக்கை தலை உடையவர்களுக்கு மாதம் ரூ.6,000 வழங்க வேண்டும் என முதலமைச்சருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் வழுக்கை தலை உடையவர்கள் சேர்ந்து சங்கம் அமைத்துள்ளனர். இந்த சங்கத்தில் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டு, பாலையா என்பவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தலைவர் பதவியை ஏற்ற பாலையா தங்களின் கோரிக்கை அடங்கிய மனு ஒன்றை அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த மனுவில், “சமூகத்தில் வழுக்கை தலையுடன் இருப்பவர்கள் பல பிரச்சனைகளையும், அவமானத்தையும் எதிர்கொள்கின்றனர். அதிலும், பலருக்கு சிறு வயதிலேயே வழுக்கை ஏற்பட்டு விடுகிறது. இதனால் அவர்கள் படும் வேதனை சொல்லி மாளாது. இவர்கள், 4 பேருடன் சேர்ந்து வெளியே செல்ல தயங்குகிறார்கள். வழுக்கை தலையுடன் இருப்பவர்களுக்கு திருமணம் நடப்பதும் கஷ்டமாக இருக்கிறது.

வழுக்கை தலையுடன் இருப்பவர்கள் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகி விடுகிறார்கள். ஊனமுற்றவர்கள், கைவிடப்பட்டவர்கள், தீராத வியாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குகிறீர்கள். அதுபோல், வழுக்கை தலை உடையவர்களுக்கும் மாதம் ரூ.6,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும். பொங்கல் பண்டிகைக்குள் ஓய்வூதியம் வழங்காவிட்டால், பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம். தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம்” என்று எச்சரித்துள்ளனர்.