ராஜஸ்தானில் காதலி கொலை என சிறைவாசம் அனுபவித்த காதலன், 7 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் வாழும் காதலியை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் மதுரா மாவட்டத்தில் ஜான்சி கிராமத்தில் வசித்து வந்த ஆரத்தி என்ற பெண் 7 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போயுள்ளார். அவரை காதலன் சோனு சைனி திருமணம் செய்து, கொலை செய்து விட்டார் என ஆரத்தியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் கடந்த 2015ஆம் ஆண்டில் சோனு மற்றும் அவரது நண்பர் கோபால் சிங் ஆகிய இருவரை காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர். 5 ஆண்டு சிறைவாசத்திற்கு பிறகு இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இதனை தொடர்ந்து காதலி ஆரத்தியை தேடும் முயற்சியில் காதலன் சோனு இறங்கியுள்ளார். விஷாலா கிராமத்தில் வசிக்கும் நபர் ஒருவர், ஜான்சியில் இருந்து ஒரு பெண் எங்கள் கிராமத்திற்கு வந்துள்ளார் என்று கூறியுள்ளனர்.

இதனால் சந்தேகம் அடைந்த சோனு, அது ஆரத்தியாக இருக்கக் கூடும் என்று எண்ணி கிராமத்தில் முகாமிட்டுள்ளார். காய்கறி விற்பவராகவும், ஒட்டகம் வாங்க வந்திருக்கிறேன் என்றும் கூறி கிராமத்திற்குள் தங்கியுள்ளார். பின்னர், ஆரத்தியை அடையாளம் கண்டு கொண்டு சோனு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி மெகந்திப்பூர் காவல் நிலையத்தில் அவர் கூறியபோது, ஆரத்தியின் அடையாளம் தங்களுக்கு வேண்டும் என்று கூறி உதவி செய்ய மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அடையாள அட்டையை எடுத்த காதலன் சோனுவுக்கு 2 ஆண்டுகள் ஆகி விட்டன. அதன்பின்பே, காவலர்கள் விசாரணையில் இறங்கியுள்ளனர். மெகந்திப்பூர் காவல் நிலைய அதிகாரிகள் அளித்த தகவலை தொடர்ந்து, உத்தரப்பிரதேச போலீசார் ஆரத்தியின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தி அவரை கண்டுபிடித்தனர்.

காதலி ஆரத்தியோ கணவரான பகவான் சிங் ரேபாரி என்பவருடன் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார். ஆரத்தியின் பெற்றோரை தொடர்பு கொண்டபோது, கொலை வழக்கு போலியானது என்பது தெரியவந்தது. ஆரத்தி, தனது பெற்றோருடன் தொடர்பில் இருந்ததும், அவரது கொலைக்காக சோனு மற்றும் கோபால் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டது பற்றியும் காதலிக்கு தெரிந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரத்தியை மரபணு சோதனைக்கு உட்படுத்தி காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சோனுவின் கைது நடவடிக்கையால் அவரது தந்தை அதிர்ச்சியில் உயிரிழந்து விட்டார். தற்போது வழக்கு செலவுக்காக ரூ.20 லட்சம் வரை சோனு செலவிட்டு, கடனாளியாகி உள்ளார்.