கணவருக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்து கொலை செய்த வழக்கில் மனைவி மற்றும் கள்ளக்காதலனை காவல்துறையினர் கைது செய்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் கமல்காந்த் ஷா (44). தொழிலதிபரான இவருக்கும் கவிதா என்ற இளம்பெண்ணுக்கு கடந்த 2002இல் திருமணமானது. இந்நிலையில், சமீப காலமாக கமல்காந்திற்கு உடல்நிலை மோசமாக காணப்பட்டுள்ளது. இதனால் அவர் கடந்த செப்டம்பர் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அது பலனின்றி 17 நாளில் உயிரிழந்தார். இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் இவரது உடலை உடற்கூறாய்வு செய்தனர். அப்போது கமல்காந்தின் இரத்தத்தில் ஆர்சனிக் மற்றும் தாலியம் போன்ற தாதுக்கள் அளவுக்கு அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோன்ற தாதுக்கள் இரத்தத்தில் போதுமான அளவு காணப்பட்டு வருகிறது. ஆனால், இது அளவுக்கு அதிகமானால் விஷத்தன்மையை உருவாக்கி உயிரை கொள்ளும்.

இதையடுத்து இதனால் தான் அவர் உயிரிழந்தார் என்பதை அறிந்த போலீஸ், இதுகுறித்து கமல்காந்தின் குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரது மனைவியின் பதில் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்தது. மேலும், கமல்காந்தின் டயட் உணவு முறையையும் கேட்டறிந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் கமல்காந்தின் மனைவி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதாவது ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த கமல்காந்த் – கவிதா வாழ்க்கையில் அண்மை காலமாக சண்டை, சச்சரவுகள் இருந்து வந்துள்ளது. அதோடு கவிதாவுக்கு ஹிதேஷ் என்ற ஆண் நண்பர் ஒருவரும் உள்ளார். இதனால் தனது கணவனை கொலை செய்ய எண்ணிய அவர், தனது ஆண் நண்பருடன் மாட்டிக்கொள்ளாமல் இருக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி, இந்த தாதுக்கள் கலந்த மருந்தை அவரது உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்டவற்றில் கொஞ்சம் கொஞ்சமாக கலந்து கொடுத்துள்ளார். இப்படி தனது கணவருக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்து கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவத்தை கவிதா வாக்குமூலமாக அளித்த பிறகு, அவரது ஆண் நண்பர் ஹிதேஷையும் போலீசார் கைது செய்தனர். மேலும், கமல்காந்தின் தாயாரும் இதே முறையில் இறந்ததால், அதுவும் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ள நிகழ்வா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் அதிர்ச்சியளிக்கும் வகையில் புதிய வாக்குமூலத்தை அளித்தார். அதாவது தனது கணவரை எவ்வாறு கொலை செய்வது என்று கூகுளில் தேடி பார்க்கையில், இராக்கின் சதாம் உசேன் தன் எதிரிகளை ஸ்லோ பாய்சன் கொடுத்துக் கொலை செய்தது, டெல்லியைச் சேர்ந்த வருண் அரோரா, தன் மாமியாருக்கும் மைத்துனிக்கும் சிறுகச் சிறுக உணவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தது போன்ற க்ரைம் செய்திகளை படித்துள்ளனர்.

பின்னர் அதனை வைத்தே கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி, முதலில் இதனை மாமியாருக்கு கொடுத்துள்ளனர். அவருக்கு கொடுக்கப்பட்ட சாப்பாடு, தண்ணீரில் விஷத்தைக் கலந்துகொடுத்துள்ளார். அதோடு தினமும் 6-8 முறை தண்ணீர், இளநீர், ஜூஸ், பால் போன்றவற்றில் தொடர்ந்து ஸ்லோ பாய்சன் கொடுத்து வந்துள்ளார். மாமியாருக்கு அது வேலை செய்யவும், அதே பாணியில் கணவருக்கும் கொடுத்து கொலை செய்துள்ளார். கைது செய்யப்பட்ட மனைவி கவிதா, மற்றும் அவரது கள்ளக்காதலன் ஹிதேஷிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.