ஈரானை மையமாகக் கொண்டு மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அளித்த பேட்டி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஏபிசி நியூஸுக்கு அளித்த நேர்காணலில், “ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை கொல்வது தான் இஸ்ரேல் – ஈரான் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் ஒரே வழி” என்று நெதன்யாகு கூறினார். ஈரானை தொடர்ந்து இலக்காகக் கொண்டு வரும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளை தன் பேட்டியில் நெதன்யாகு மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தினார்.
இந்த நடவடிக்கைகள் மோதலை அதிகரிக்க அல்ல, மாறாக அதன் முடிவுக்காக என்றும், இஸ்ரேல் சுமூகமான முடிவுக்காக போராடுகிறது எனவும் அவர் வலியுறுத்தினார். இதற்கு முந்தைய காலங்களில், டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்கா ஈரான் தலைமைக்கு எதிரான தாக்குதலை திட்டமிட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அதனைத் தொடர்ந்து வரும் இந்த பேட்டி, மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலையை மேலும் மோசமாக்கக்கூடும் என நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
“ஈரான் கடந்த அரை நூற்றாண்டாக பகைமை, பயங்கரவாதம், நாசவேலை ஆகியவற்றை பரப்பி வருகிறது. அரம்கோ எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் நடத்தியதன் பின்னணியில் இவர்களே உள்ளனர்,” என ஈரானை சாடிய நெதன்யாகு, அந்த நாட்டின் அணு ஆயுதத் திட்டம் ஒரு உலகளாவிய அச்சுறுத்தல் என்று எச்சரிக்கை விடுத்தார். மேலும், “இவர்கள் ‘இஸ்ரேலுக்கு மரணம், அமெரிக்காவுக்கு மரணம்’ என முழக்கமிடுகிறார்கள். இப்போது டெல் அவிவ் தான் இலக்கு என்றால், நாளை நியூயார்க் கூட இருக்கலாம்” என்றார்.
அத்துடன், இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை ஏமாற்றும் நடவடிக்கைகள் எனக் கடுமையாக விமர்சித்த நெதன்யாகு, ஈரானின் நோக்கங்களைப் புரிந்துகொள்ள இஸ்ரேலிடம் நம்பகமான உளவுத்துறை தகவல்கள் உள்ளன என்றும் கூறினார். ஈரானின் ஏவுகணை மற்றும் அணுசக்தி அபிவிருத்தி, இஸ்ரேல் மட்டுமின்றி மத்திய கிழக்கின் மற்ற அரபு நாடுகள், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுக்கும் ஆபத்தானதாக இருக்கக்கூடும் என்றார்.
இதனிடையே, ஜனாதிபதி டிரம்பின் நிலைப்பாட்டைப் பாராட்டிய நெதன்யாகு, சில நேரங்களில் தீமையை எதிர்த்து உறுதியான நிலைப்பாடு தேவைப்படுகிறது. அதைத்தான் டிரம்ப் புரிந்துகொண்டார், என புகழ்ந்தார். இந்த பேட்டி வெளியாகியதுடன், பல பன்னாட்டு பாதுகாப்பு ஆய்வாளர்கள் மற்றும் ஜனநாயக அமைப்புகள், இஸ்ரேலின் புதிய போக்குக்கு கடும் விமர்சனங்கள் தெரிவித்து வருகின்றனர். இது மத்திய கிழக்கை ஒரு மிகப்பெரிய யுத்தப் பரப்பளவாக மாற்றக்கூடும் என்றும் எச்சரிக்கின்றனர்.
Read more: மீண்டும் தொழில்நுட்பக் கோளாறு.. அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்.. இந்த முறை எங்கு?