புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் இன்று காலை தமிழகத்தின் செங்கோல் நிறுவப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இந்தியாவில் ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக செங்கோல் வழங்கப்பட்டதா? இல்லையா? என்ற சர்ச்சை எழுந்திருக்கிறது இது குறித்து சட்டம் மற்றும் வரலாற்று ஆவணங்கள் தெரிவிப்பது என்ன என்பதை தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
அதாவது, இந்திய விடுதலைச் சட்டம் 1947 அடிப்படையில், ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி இங்கிலாந்து பேரரசிடமிருந்து இந்தியா சுதந்திரம் அடைந்தது. இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்திற்கு 1947 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் தேதி ஒப்புதல் வழங்கப்பட்டது.
அந்த சட்டத்தில் ஆகஸ்ட் 15 1947 ஆம் ஆண்டு முதல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் என்ற இரு நாடுகள் தன்னாட்சி அந்தஸ்தை பெறுவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டமும் இதில் இடப்பட்ட கையொப்பமுமே ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக கருதப்படுகின்றது. இவற்றைத் தவிர்த்து ஆட்சி மாற்றத்திற்கான நிகழ்வுகள் என்று எதுவும் சட்டத்தில் இடம் பெறவில்லை என்றும் குறிப்பிடப்படுகிறது.
அதேபோல இந்தியா சுதந்திரம் பெற்றபோது வெளியான பல்வேறு நாளிதழ்களில் ஆதீனங்கள் நேருவிற்கு செங்கோல் பரிசாக வழங்கியதற்கான ஆவணங்கள் மட்டுமே இருக்கின்றது. எந்த நாளிதழ்களிலும் ராஜாஜியின் ஆலோசனையின் அடிப்படையிலேயே ஆட்சிமாற்றத்தின் அடையாளமாக மவுண்ட் பேட்டனிடம் செங்கோலை வழங்கி அதன் பிறகு நேருவிடம் அதனை கொடுத்ததாக செய்திகள் வெளியாகவில்லை.
அதோடு நாளிதழ்கள் மட்டுமல்லாமல் இந்தியா சுதந்திரம் பெற்ற வரலாறு குறித்து வெளியான புத்தகங்கள், ஆவண குறிப்புகளிலும் ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக செங்கோல் வழங்கப்பட்டது என்பதற்கான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. அதிலும் குறிப்பாக வெளிநாட்டு எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களில் அறிவியல் மற்றும் பொதுவுடமை சிந்தனையுடனான இந்தியாவை உருவாக்குவதற்கு தான் நேரு விரும்பியதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆனாலும் மரியாதையின் அடிப்படையில், ஆதீனம் வழங்கிய செங்கோலை நேரு பெற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதோடு தனியார் இடத்தில் வைத்துதான் செங்கோல் நேரு வழங்கப்பட்ட நிகழ்வு நடந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.
இத்தகைய நிலையில், கடந்த 1947 ஆம் வருடம் இந்தியா சுதந்திரம் அடைந்திருந்தாலும் கூட, உண்மையான ஆட்சி மாற்றம் என்பது 1950ல் தான் உண்டானது. அதாவது, ஜனவரி 26 1950 ஆம் ஆண்டு முதலே தம்மை யார் ஆள வேண்டும் என்று மக்கள் முடிவு செய்யும் அதிகாரம் பெற்ற குடியரசு நாடாக இந்தியா உருமாறியது. அப்போது கூட செங்கோல் எதுவும் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.