வீட்டு மின் இணைப்பு பெயர் மாற்றத்துக்கு புதிய நடைமுறையை தமிழ்நாடு மின்உற்பத்திக் கழகம் கொண்டு வந்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்திக் கழக வணிக பிரிவு தலைமைப் பொறியாளர் அனுப்பிய சுற்றறிக்கையில் விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஏராளமான ஆவணங்களை கேட்பதால், வீட்டு மின்இணைப்பு பெயர் மாற்றம் செய்ய தேவையற்ற தாமதம் ஏற்படுகிறது. இந்தப் பணிகளை வேகப்படுத்தும் வகையில், முந்தைய உரிமையாளரின் ஒப்புதல் பெறும் படிவம் 2-ஐ நுகர்வோரிடம் இருந்து பெற வேண்டியதில்லை என அறிவுறுத்தப்படுகிறது.
அதேநேரம், விற்பனை, பங்கு பிரித்தல், பரிசளித்தல் போன்ற நேர்வுகளில் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமானால், விற்பனை பத்திரம், சொத்து வரி ரசீது, நீதிமன்ற தீர்ப்பு உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்று, ஒப்புதல் கடிதம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் உயிரிழந்ததால் பெயர் மாற்றம் செய்யும் நேர்வுகளில், வாரிசு சான்றிதழ் அல்லது அண்மை காலத்தில் பெறப்பட்ட சொத்து வரி ரசீது மற்றும் இழப்பீடு பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தலைமைப் பொறியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் (TANGEDCO) இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, தேவையான ஆவணங்களை பதிவேற்றி, கட்டணத்தைச் செலுத்தலாம். ஆன்லைன் வசதி இல்லாமலோ அல்லது தேவைப்பட்டாலோ, தாலுகா மற்றும் மாவட்ட அளவிலான மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் மூலம் பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.
தேவையான ஆவணங்கள்
சொத்துரிமைக்கான ஆதாரம்: சொத்து வரி ரசீது அல்லது பட்டா, சிட்டா, அடங்கல் போன்ற நில ஆவணங்கள் கட்டாயம் தேவை. விண்ணப்பதாரரின் அடையாளச் சான்றாக ஆதார் அட்டை இருக்க வேண்டும்.குடியிருப்புச் சான்றாக விண்ணப்பதாரர் அந்த வீட்டில் வசிக்கிறார் என்பதற்கான சான்று. முந்தைய உரிமையாளர் இல்லை என்றாலோ அல்லது வீடு வாடகைக்கு எடுத்தாலோ, அல்லது உரிமையாளர் இல்லை என்றாலோ படிவம் 5 போன்ற கடிதம் அல்லது படிவம் 6 சமர்ப்பிக்க வேண்டும்.