கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவர் தனது மனைவி மற்றும் மகன் சுபாசுடன் திருப்பூரில் தங்கி, பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், மகன் சுபாஷ் அனுஷா என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த தண்டபாணி இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், காதலை கைவிடும்படி கூறி வந்துள்ளார். ஆனால், சுபாஷ் காதலை கைவிடவில்லை. இதற்கிடையே தான் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சுபாஷ், அனுஷாவை திருமணம் செய்து கொண்டார்.
இதையடுத்து, சுபாஷ் தனது மனைவி அனுஷாவுடன் திருப்பூரில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், சுபாஷ் நேற்று தனது மனைவியுடன் சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு வந்தார். அங்கு அவர் தனது பாட்டி கண்ணம்மா (தண்டபாணியின் தாய்) வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கு சென்ற தண்டபாணி அரிவாளை எடுத்து மகன் சுபாஷ், அவரது மனைவி அனுஷா மற்றும் தாய் கண்ணம்மா ஆகியோரை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் 3 பேரும் துடித்த நிலையில், தண்டபாணி அங்கிருந்து தப்பியோடினார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் சுபாஷ், கண்ணம்மா ஆகியோர் இறந்தது தெரியவந்தது. அனுஷாவுக்கு மட்டும் தீவிர சிசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆணவக்கொலை செய்யப்பட்ட சுபாஷ், பாட்டி கண்ணம்மாவின் உடல் ஊத்தங்கரை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.