தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் அக்.7, 8ஆம் தேதிகளில் திருச்சி, கடலூர், விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வடக்கு ஆந்திர கடலோர பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல், குமரி கட,ல் மன்னார் வளைகுடா உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம் மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு ராஜாக்கமங்கலம் முதல் நீரோடி வரையிலான சுமார் 40-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் பைபர் படகு மற்றும் விசைப்படகுகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தமிழகம் மற்றும் ஆந்திரா பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்ச்சியால், பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் குமரிக்கடல், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கடல் சீற்றமாகவே காணப்படும் எனவும் எனவே, அந்த பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதலே சூரைக்காற்றுடன் கடல் சீற்றமாகவே காணப்படுவதோடு கடல் பகுதிகளில் கனமழையும் பெய்தது. இதனால் நேற்று மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாத நிலையில் குளச்சல், முட்டம் மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபடும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்களும் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்களும் 2-நாளாக இன்றும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத நிலையில், தங்கள் படகுகளை துறைமுகங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.