உக்ரைன்-ரஷ்யா போருக்கு பிறகு உலகம் முழுவதும் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், ஆசியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் கடுமையான அரிசி தட்டுப்பாடு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சர்வதேச அளவில் கடந்த 11 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு அரிசியின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், இந்தியாவில் அரிசிக்கான குறைந்தபட்ச ஆதார விலை அதிகரிக்கப்பட்டால், உலக அரங்கில் அரிசியின் விலை மேலும் உயரக்கூடும் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. எல் நினோ மழை பொழிவு காரணமாக நிலைமை இன்னும் மோசம் அடைய கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் இந்தியாவில் இருந்து தான் அதிக அளவில் அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. மொத்த அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 40% மேல் உள்ளது. இதனால் கோதுமையை போல் உள்நாட்டில் அரிசியின் விலையை கட்டுப்படுத்த ஏற்றுமதிக்கு அரசு ஏதேனும் கட்டுப்பாடு விதித்தால் அது உலக அரங்கில் அரிசியின் விலையை மேலும் அதிகரிக்கச் செய்யும் என எச்சரிக்கப்படுகிறது. அதே வேளையில், உலக சந்தையில் இந்தியாவின் அரிசி தான் மலிவு விலையில் விற்கப்படுகிறதாம். இந்தியாவுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் அரிசி ஏற்றுமதி செய்யும் நாடுகளான தாய்லாந்து மற்றும் வியட்னாமிலும் அரிசியின் விலை அதிகமாக உள்ளது.
உலகில் சுமார் 300 கோடி மக்களின் பிரதான உணவாக அரிசி உள்ள நிலையில், அரிசிகள் அதிகம் விளைவிக்கப்படும் நாடுகளான வங்கதேசம், இந்தியா, சீனா, தாய்லாந்து, வியட்நாம் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் குறைந்த மழைப்பொழிவு காரணமாகவும், தாமதமாக தொடங்கப்பட்ட நடவு பணி காரணமாகவும் அரிசி உற்பத்தி குறையும் என கணக்கிடப்பட்டு இருப்பது சந்தையில் அரிசியின் விலை மேலும் அதிகரிக்க முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.