மதுபானங்கள் உடல்நலத்துக்கு வேண்டுமானால் தீங்கு விளைவிக்கலாம். ஆனால், மத்தியப்பிரதேச மாநிலம் நர்மதாபுரம் மாவட்ட விவசாயிகள் பருப்பு வகைகளை சாகுபடி செய்யும்போது பூச்சி மருந்துக்கு பதில் மதுபானத்தில் தண்ணீர் கலந்து தெளிக்கிறார்கள். மஞ்சள் உள்ளிட்ட பிற பயிர்களுக்கும் விவசாயிகள் இதை முறையை பயன்படுத்துகிறார்கள். விவசாயிகள் இப்படிச் செய்தாலும் வேளாண் விஞ்ஞானிகளின் கருத்து வேறாக உள்ளது.
பெரும்பாலான விவசாயிகள் 100 மில்லி மதுபானத்துடன் 15 லிட்டர் தண்ணீர் சேர்த்து பயிர்களுக்கு தெளிக்கிறார்கள். ரசாயன உரங்களைவிட இதற்காகும் செலவு குறைவாக இருப்பதாகவும் பயிர் விளைச்சலும் அதிகமாக இருப்பதாகவும் கூறுகிறார்கள். சிறிய அளவு மதுபானத்துடன் தண்ணீர் கலந்து பயிர்களின் மீது தெளிக்கும் டெக்னிக்கை நர்மாதாபுர மாவட்டம், நயகேடா என்னும் பகுதியைச் சேர்ந்த விவசாயி பிரேம் சங்கர் படேல் பகிர்ந்துகொண்டார்.
இப்படிச் செய்வது நடைமுறை அல்ல என்றாலும் இது அதிக பலன் தருகிறது என்கிறார் அவர். பாசி பயறு பயிரிட்டால் பூச்சி கொல்லி மருந்து தெளிக்க ஏக்கருக்கு ரூ.100 முதல் ரூ.150 வரை செலவாகிறது. ஆனால், மதுபானத்தில் தண்ணீர் கலந்து தெளிக்க ஏக்கருக்கு ரூ.10 முதல் ரூ.12 வரைதான் செலவு, வெட்டுக்கிளிகள் பயிரை நாசம் செய்யாமல் தடுக்கவும் இதை தெளிக்கலாம் என்கிறார் அவர். பைச்சுவா கிராமத்தை சேர்ந்த காசிராம் என்பவர் கூறுகையில், இந்த முறையை கடைப்பிடிப்பதன் மூலம் மகசூல் அதிகரிப்பது மட்டுமல்ல, பயிரின் தரமும் நன்றாக இருக்கிறது. 100 மி.லி. மதுபானத்துக்கு 15 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கலாம் என்கிறார் அவர்.
ஜமுனியா ரண்தீர் கிராமத்தைச் சேர்ந்த ஜீதேந்திர பார்கவா என்பவர் 30 ஏக்கர் பயிரிடுகிறார். ஒரு ஏக்கருக்கு 500 மில்லி மதுபானம் இருந்தால் போதுமானது. தண்ணீர் கலந்து தெளிக்கலாம். செலவும் அதிகமில்லை என்கிறார். கோரோஜென், அமிதா, அசிடா, தியோ போன்ற பூச்சிக் கொல்லி மருந்துகள் ரூ.1,200 முதல் ரூ.1,800 வரை விலை வைத்து விற்கப்படுகின்றன. நாட்டு மதுபானத்துடன் தண்ணீர் கலந்து தெளிப்பதால் ஏக்கருக்கு ரூ.150 மட்டுமே செலவு என்கின்றனர் விவசாயிகள். ஆனால், மதுபானத்தில் தண்ணீர் கலந்து பயிர்களுக்கு தெளிப்பதால் விளைச்சல் அதிகரிக்கும் என்பதற்கு ஆதாரம் ஏதும் இல்லை என்கின்றனர் நிபுணர்கள். அதிபட்சம் பயிர்களில் உள்ள பூச்சிகள் அழிக்கப்படும் என்கின்றனர்.
ஜவாஹர்லால் நேரு கிருஷ் விஸ்வ வித்யாலயாவைச் சேர்ந்த மூத்த விஞ்ஞானி முனைவர் எஸ்.பி.அகர்வால் கூறுகையில், மதுபானம் கலந்த தண்ணீரை பூச்சி மருந்தாக தெளிப்பதால் பருப்பு விளைச்சல் கூடும் என்பதை ஏற்க முடியாது என்கிறார். மத்தியப்பிரதேசத்தில் இந்த ஆண்டு 10.79 லட்சம் ஹெக்டேரில் பாசிப் பருப்பு பயிரிடப்பட்டுள்ளது. இதுவே கடந்த ஆண்டு 9.29 லட்சம் ஹெக்டேராக இருந்தது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாசி பருப்பு உற்பத்தியில் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.