ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் சென்று வருங்காலத்தில் பரிசீலிக்கப்படும் என உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர், ”தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள 19,000 குடும்பங்களுக்கும், ரூ.1000 ரொக்க பணம், பச்சரிசி, முழு கரும்பு உள்ளிட்டவை வழங்கப்படும் எனவும் இதனை முதலமைச்ச சென்னையில் தொடங்கி வைக்க உள்ளார் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “கலைஞர் கருணாநிதியின் ஆட்சி காலத்தில் புரதச் சத்துமிக்க உணவுப் பொருட்கள் வழங்க வேண்டும் என சிறப்பு பொது விநியோக திட்டம் தொடங்கப்பட்டு துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, மைதா உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. அதில், கடந்த ஆட்சியில் இரண்டு பொருட்களை நிறுத்தி விட்டார்கள். ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனை முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் சென்று வருங்காலத்தில் பரிசீலிக்கப்படும்” என தெரிவித்தார்.

மேலும், “வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், கைரேகை வைத்து ரேசன் பொருட்கள் வாங்க முடியவில்லை. எனவே, கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வழங்கும் திட்டம் முன்னோட்டமாக சேப்பாக்கம், பெரம்பலூர் ஆகிய 2 இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் அதனை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான டெண்டர் விடப்பட்டு கைரேகை, கருவிழி மூலம் பொருட்கள் பெறுவது அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும்” என தெரிவித்தார். இதனையடுத்து கோவை தனியார் கல்லூரியில் நடைபெற்ற சிறுதானிய கண்காட்சியில் பங்கேற்று பின்னர், மாநாட்டில் பேசிய அமைச்சர் சக்கரபாணி, வரும் ஆண்டுகளில் நியாயவிலை கடைகளில் அரிசியை படிப்படியாக குறைத்து சிறுதானியங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். முதற்கட்டமாக இந்த ஆண்டு முதல் தருமபுரியிலும் நீலகிரியிலும் அரிசிக்கு பதிலாக 2 கிலோ ராகி வழங்க முடிவெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.