தமிழில் இருந்து வந்ததுதான் கன்னடம் என நடிகர் கமல்ஹாசன் சொன்ன கருத்தில் எந்தத் தவறும் இல்லை என சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.
‘தக் லைஃப்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய கமல்ஹாசன், ‘தமிழ் மொழியில் இருந்து கன்னடம் பிறந்தது’ என்று கூறி இருந்தார். கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு பல்வேறு கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா ‘கமல்ஹாசனுக்கு கன்னட மொழி குறித்த வரலாறு தெரியவில்லை’ என்று கூறியுள்ளார். அதேபோல் கர்நாடகா மாநிலத்தின் பா.ஜனதா தலைவர் விஜயேந்திராவும் கண்டனம் தெரிவித்து, ‘கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று வலியுறுத்தி உள்ளார்.
இந்த நிலையில் தமிழில் இருந்து வந்ததுதான் கன்னடம் என நடிகர் கமல்ஹாசன் சொன்ன கருத்தில் எந்தத் தவறும் இல்லை என தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட தீர்ப்பு வரவேற்கத்தக்கது. அவருக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும்
தமிழில் இருந்துதான் கன்னடம் உருவானதாக நடிகர் கமல்ஹாசன் சொன்ன கருத்து சரியானது. மதராஸ் மாகாணமாக இருந்தபோது மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படாததற்கு முன்பு 18 மொழிகளைக் கற்றுத் தெரிந்த ராபர்ட் கால்டுவெல் ஆய்வு செய்து திராவிட மொழிகளுக்கு ஒப்பிலக்கணம் எழுதியுள்ளார்.
சமஸ்கிருதத்தில் இருந்துதான் தமிழ் உள்ளிட்ட மொழிகள் வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால், அதனை ராபர்ட் கால்டுவெல் ஆய்வு செய்து மறுத்துள்ளார். திராவிடக் குடும்பத்தின் முதல் மொழி தமிழ் எனக் கூறியுள்ளார். கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகள் தமிழில் இருந்துதான் பிறந்துள்ளதாக கூறியுள்ளார். தான் கூறியதற்கு ஆதாரங்கள் உள்ளதாகவும் கமல்ஹாசன் சொன்னது சரிதான் எனவும் கூறியுள்ளார்.
Read more: அரபிக் கடலில் கப்பல் மூழ்கிய விபத்து: பேரிடராக அறிவித்த கேரள அரசு..!