நாடு முழுவதும் தற்போதைய பல அடுக்கு வரி விதிப்பு முறைக்கு பதிலாக, இனிமேல் 5% மற்றும் 18% என இரண்டு முக்கிய வரி விகிதங்கள் மட்டுமே இருக்கும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய வரி, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றம், குறிப்பாக ரியல் எஸ்டேட் துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, வீட்டு விலைகளை கணிசமாக குறைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
புதிய ஜிஎஸ்டி அமலுக்கு வந்தால் எப்படி இருக்கும்..?
தற்போது, அத்தியாவசிய பொருட்களுக்கு 0%, அன்றாட பயன்பாட்டு பொருட்களுக்கு 5%, நிலையான பொருட்களுக்கு 12%, மின்னணு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு 18%, சொகுசு மற்றும் சில குறிப்பிட்ட தீய விளைவு பொருட்களுக்கு 28% என பல அடுக்குகளில் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. இனி புதிய திட்டத்தின்படி, பெரும்பாலான அத்தியாவசிய மற்றும் அன்றாட பயன்பாட்டுப் பொருட்கள் 5% வரி வரம்பிற்குள் கொண்டுவரப்படும். கிட்டத்தட்ட மற்ற அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளும் 18% வரி வரம்பிற்குள் வரும். சொகுசு கார்கள், புகையிலை போன்ற மிகச் சில பொருட்களுக்கு மட்டும் 40% சிறப்பு வரி விதிக்கப்படலாம். இந்த மாற்றம், வரி செலுத்துவதை எளிதாக்குவதையும், இணக்க செலவுகளை குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ரியல் எஸ்டேட் துறையில் ஏற்படும் மாற்றங்கள்
ஜிஎஸ்டி சீர்திருத்தம், ரியல் எஸ்டேட் துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, சிமெண்ட் மீது 28%, ஸ்டீல் மற்றும் செராமிக் டைல்ஸ் மீது 18% என அதிக ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. புதிய வரி அமைப்பில், சிமெண்ட் போன்ற பொருட்களின் மீதான வரி 18% ஆக குறையும்போது, கட்டுமான செலவுகள் குறையும். கட்டுமான செலவுகள் குறைந்தால், அது வீடுகளின் விலையில் பிரதிபலிக்கும். தற்போது, கட்டப்பட்டு வரும் வீடுகளுக்கு (under-construction properties) 5% ஜிஎஸ்டியும், மலிவு விலை வீடுகளுக்கு (affordable housing) 1% ஜிஎஸ்டியும் விதிக்கப்படுகிறது. உள்ளீட்டு வரி குறைவதால், பில்டர்கள் வீட்டின் விலையைக் குறைக்க வாய்ப்புள்ளது.