தமிழகத்தில் பொதுமக்கள் நேரில் வராமல் ஆன்லைன் மூலமாகவே ஆவணங்களைப் பதிவு செய்யும் ‘வருகையில்லா ஆவணப் பதிவு’திட்டம் வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டம் குறித்து வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒருபகுதியாக கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் இத்திட்டம் தொடர்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் த. லோகேஷ் தமிழ்ச்செல்வன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் அலைவதைத் தவிர்க்கவும், சேவைகளை எளிதாகவும் வேகமாகவும் பெறவும் இப்புதிய ஆன்லைன் முறை பெரிதும் பயன்படும் என்றார். மேலும், பதிவு செய்யப்படும் ஆவணங்கள் 24 மணி நேரத்திற்குள் விண்ணப்பதாரர்களுக்குக் கிடைக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பொதுமக்களுக்கு இத்திட்டம் குறித்த விழிப்புணர்வு எளிதில் சென்றடையும் வகையில், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 17)- முதலமைச்சர் விஜய் இப்புதிய சேவையைத் தொடங்கி வைக்க உள்ளார். சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இதற்கான ஆயத்தப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தர்.



