சமூக வலைதளங்களில் எந்த வீடியோக்கள் அதிகம் பார்க்கப்படுகிறது, பகிரப்படுகிறது என்பதற்கு ஏற்ற வகையில் குறிப்பிட்ட யு டியூப் சேனலை நடத்துபவர்களுக்கு வருமானம் வரும். இதனால் தங்கள் வீடியோக்களை பார்க்க வைக்க எந்த அளவிற்கு வேண்டுமானாலும் கீழே இறங்கி சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.
இதுபோன்ற சேனல்கள் பார்வையாளர்கள், பின்தொடர்பவர்கள், லைக், ஷேர், கமெண்ட்ஸ், சப்ஸ்க்ரைபர் என்ற 6 விஷயங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்து தங்களது பிழைப்பை நடத்தி வருகின்றனர். இதைப் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள், இதில் கலந்து கொள்பவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை பற்றி எல்லாம் யோசிக்காமல், தங்களது யு டியூப் சேனல்களை வளர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இவர்களது செயல்பாடுகள் உள்ளன.

அந்த வகையில் சென்னை மெரினா கடற்கரைக்கு வரும் மாணவ மாணவிகளின் மனதை கெடுக்கும் வகையில் ஆபாச கேள்வி கேட்டு வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தார் வீரா டால்க்ஸ் என்ற யூ-டியூப் சேனலின் பெண் நிகழ்ச்சி தொகுப்பாளர். இதனை பார்த்த அந்த வழியாக சென்ற வழக்கறிஞர் ஒருவர் அந்த சேனலின் பெண் நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் கேமிரா மேனை மடக்கி பிடித்து ஏன் இப்படி கேள்வி கேட்கிறீர்கள்? யார் உங்களுக்கு அனுமதி கொடுத்தது என கேள்வி எழுப்பியுள்ளார்.
அவருடன் யூ-டியூப் சேனலை சேர்ந்த இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபடவே, உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்த வழக்கறிஞர், பொது இடத்தில் மாணவ மாணவிகளிடம் இருவரும் கூச்சமின்றி ஆபாச கேள்விகளை கேட்டு அதனை வீடியோவாக பதிவு செய்துவருவதை தெரிவித்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மெரினா போலீசார் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று, மைக் மற்றும் கேமராவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.