சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமாருக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. அதி விரைவு ரயில் என்பதால் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த கோரமண்டல் ரயில் நேற்று மாலை ஷாலிமாரில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தது, இரவு 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே வந்தபோது தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த கோரமண்டல் ரயில் up-line வழித்தடத்தில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அதே பகுதியில் Down-line-ல் சென்ற பெங்களூரு- ஹவுரா அதிவிரைவு ரயில், தடம்புரண்டு விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் மீது மோதியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 பயணிகள் ரயிலுடன், மூன்றாவதாக சரக்கு ரயில் ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்த இடத்தில் விடிய, விடிய மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்து வருகிறது. நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் இதுவரை 238 பேர் பலியாகியுள்ளதாக தகவல். மேலும் விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ தாண்டியதாக கூறப்படுகிறது.
இந்த கோர விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 35 பேர் பலியாகியுள்ளதாக தமிழக வருவாய்த்துறை செயலாளர் குமார் ஜெயந்த் தகவல். உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்று அச்சமும் நிகழ்கிறது. இந்த விபத்து குறித்து ஆய்வு நடத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் ஸ்டாலின், சிறப்பு குழுவை ஒடிசாவுக்கு அனுப்பி வைப்பதாகவும், ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு, தமிழக அரசு சார்பில் 5லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்.