2019-ம் ஆண்டு இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமனை கைது செய்ததாக கூறப்படும் பாகிஸ்தான் ராணுவ அதிகாரி மேஜர் மொய்ஸ் அப்பாஸ் ஷா, தெற்கு வசிரிஸ்தானில் நடைபெற்ற தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) படையினருடனான மோதலில் உயிரிழந்துள்ளார்.
37 வயதான மேஜர் ஷா, பாகிஸ்தானின் உயர்நிலை சிறப்பு சேவைக் குழுவான SSG பிரிவில் பணியாற்றி வந்தவர். TTP தாக்குதல்களைத் தடுக்க முன்னணி பதவியில் செயல்பட்டபோது, லான்ஸ் நாயக் ஜிப்ரானுல்லாவுடன் இணைந்து சுட்டுக் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
2019 பிப்ரவரி மாதம், புல்வாமா தாக்குதல் பின்னணியில் நடைபெற்ற பாலகோட் விமான தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா-பாகிஸ்தான் இடையே வான்வழி மோதல் ஏற்பட்டது. இதன்போது இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 பைசன் விமானத்தை ஓட்டி சென்ற அபிநந்தன், பாகிஸ்தானின் எல்லைக்குள் சென்று சிறைபிடிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து அவரை சிக்க வைத்திருந்தது மேஜர் மொய்ஸ் ஷா உள்ளிட்ட ராணுவத்தினர்தான் என பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
2007-ல், இஸ்லாமாபாத்தின் ‘லால் மசூதி’ தாக்குதலுக்குப் பதிலளிக்க உருவாக்கப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) , ஆரம்பத்தில் பாகிஸ்தானின் இரகசிய சேவையுடன் (ISI) தொடர்புடைய சில பயிற்சிகளை பெற்றிருந்தது. பின், அந்த அமைப்பே தற்போது பாகிஸ்தானுக்கே ஒரு பெரிய ஆபத்தாக உருவெடுத்துள்ளது. 2024-ல் மட்டும் TTP தாக்குதல்களில் 1,200-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2025 ஆரம்பத்தில் இதுவரை 116 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.