வங்கதேசத்தில் அதிகரித்து வரும் வன்முறைக்கு மத்தியில், பாகிஸ்தானின் திட்டங்கள் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியானது.. இதையடுத்து இந்தியாவில் பாதுகாப்பு அமைப்புகள் உச்சகட்ட எச்சரிக்கையுடன் உள்ளன. டாக்காவில் நிலவும் அமைதியின்மையைப் பயன்படுத்தி, வங்கதேச வழித்தடம் வழியாக இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவ செய்ய ஐஎஸ்ஐ திட்டமிட்டு வருவதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அசாம், திரிபுரா மற்றும் மேற்கு வங்கம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்காக பல பயங்கரவாதிகள் பாகிஸ்தானிய அமைப்புகளிடமிருந்து பயிற்சி பெற்றதாக கூறப்படுகிறது. வங்கதேசத்தில் உள்ள ஏழை சமூகங்கள் மற்றும் ரோஹிங்கியா அகதிகள் உட்பட பாதிக்கப்படக்கூடிய மக்கள், ஜிஹாதில் பங்கேற்கவும் இந்தியாவுக்குள் நுழையவும் பணத்தைக் கொடுத்து தூண்டப்படுவதாகக் கூறப்படுகிறது.
வங்கதேசத்தில் சமீபத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களைத் தொடர்ந்து, ஐஎஸ்ஐ மற்றும் லஷ்கர்-இ-தொய்பா (LeT) மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது (JeM) உள்ளிட்ட பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுக்கள் அப்பகுதியில் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகத் தெரிகிறது.
பாகிஸ்தானிய பயங்கரவாத அமைப்புகள், ஜமாத்-உல்-முஜாஹிதீன் வங்கதேசம் (JMB), அன்சருல்லா பங்களா டீம் (ABT) மற்றும் ஹிஸ்ப்-உத்-தஹ்ரீர் போன்ற தீவிரவாத வங்கதேசக் குழுக்களுடன் கைகோர்த்துள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. LeT மற்றும் JeM உடன் தொடர்புடைய பல போராளிகள் சமீபத்தில் வங்கதேசத்தில் காணப்பட்டுள்ளனர்; அவர்களில் JeM உடன் தொடர்புடைய மசார் சயீத் ஷாவும் ஒருவர்.
பாதுகாப்பு அமைப்புகள் வங்கதேச எல்லையில் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றன, மேலும் ஆயுதப் படைகள் உச்சகட்ட எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
வங்கதேசத்தில் போராட்டங்கள்
டிசம்பர் 12 அன்று டாக்காவின் பிஜோய்நகர் பகுதியில் பிரச்சாரம் செய்துகொண்டிருந்த 32 வயது இளைஞர் தலைவர் ஷெரீப் உஸ்மான் பின் ஹடி, அடையாளம் தெரியாத நபர்களால் தலையில் சுடப்பட்டார். பின்னர் அவர் சிங்கப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மரணத்தைத் தொடர்ந்து, வங்கதேசத்தின் பல பகுதிகளில் வன்முறை மற்றும் நாசவேலைகள் வெடித்தன. சட்டோகிராமில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரியின் இல்லத்தின் மீது கற்கள் வீசப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹாடியின் உடல் சனிக்கிழமை அன்று டாக்கா பல்கலைக்கழக மசூதிக்கு அருகில், தேசியக் கவிஞர் காசி நஸ்ருல் இஸ்லாமின் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்ற அவரது இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
தீபு சந்திர தாஸின் கும்பல் படுகொலை
வங்கதேசத்தின் மைமன்சிங்கில் வன்முறைக்கு மத்தியில், மத நிந்தனைக் குற்றச்சாட்டின் பேரில் ஒரு கும்பலால் தாக்கப்பட்ட இந்து மதத்தைச் சேர்ந்த தீபு சந்திர தாஸ் என்பவர் கொல்லப்பட்டார். ஆத்திரமடைந்த கும்பலால் அவரது உடல் எரிக்கப்பட்டது. இந்த வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களுக்கு எதிராக இந்தியாவில் மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



