டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணியை ஜிம்பாப்வே அணி 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த சூழலில் பாகிஸ்தான் பிரிதமரும் ஜிம்பாப்வே அதிபரும் மிஸ்டர் பீனை குறிப்பிட்டு கலாய்த்து வருகின்றனர்.
டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ரன்களை எடுத்தது. 131என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 129 ரன்களை மட்டுமே எடுத்தது, இதனால் ஒரு ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி ஜிம்பாப்வே த்ரில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் தோல்வியடைந்ததை மற்ற நாட்டு ரசிகர்கள் சகஜமாக பார்த்தாலும், ஜிம்பாப்வே ரசிகர்கள் இதனை கவுரவமாக பார்த்து வருகின்றனர். இதற்கு காரணம் “மிஸ்டர் பீன்” தான். அதாவது கடந்த 2016ஆம் ஆண்டு ஜிம்பாப்வேவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பிரபல “மிஸ்டர் பீன்” கதாப்பாத்திரத்தில் நடித்த ரோவன் அத்கின்சான் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

ஆனால் அங்கு சென்றதோ பாகிஸ்தானை சேர்ந்த நாடக நடிகரான ஆசிஃப் முகமது, இவர் மிஸ்டர் பீனை போலவே இருப்பார். அவரை நிஜமான மிஸ்டர் பீன் என நினைத்த ஜிம்பாப்வே அரசு, முக்கிய பிரபலங்களுக்கு தரப்படும் பாதுகாப்புகளும் அவருக்காக கொடுத்திருந்தது. ஜிம்பாப்வே மக்களும் அவருக்கு உற்சாக வரவேற்பை கொடுத்தனர். பிறகு தான் தெரிந்திருக்கிறது அவர் போலியான மிஸ்டர் பீன் என்று.

இந்நிலையில் pakVSzim போட்டி தொடங்குவதற்கு முன் ஜிம்பாப்வே ரசிகர் ஒருவர் “மிஸ்டர் பீன்” சம்பவத்தை குறிப்பிட்டு, ஜிம்பாப்வே மக்கள் உங்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டோம். போலியான பாகிஸ்தான் பீனை எங்களிடம் அனுப்பினீர்கள். இதற்கு இந்த போட்டியின் மூலம் பழிதீர்க்கவுள்ளோம் என ட்வீட் செய்தார். இதற்கு பாகிஸ்தான் ரசிகர்கள் “முடிந்தால் செய்து பாருங்கள்” என சவால் விடுக்க, இந்த சம்பவம் இரு தரப்பினரிடமும் வெடித்தது. மேலும் இந்த போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றது.
ஆனால் இந்த விவகாரத்தில் ஜிம்பாப்வே அதிபர் எம்மர்சன் மங்காக்வா தலையிட்டுள்ளார். ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் ஜிம்பாப்வே அதிபர், அந்த பதிவில் “ஜிம்பாப்வேக்கு என்னவொரு வெற்றி! வீரர்களுக்கு வாழ்த்துகள். அடுத்த முறை உண்மையான மிஸ்டர் பீனை அனுப்புங்கள்..” என்று பாகிஸ்தானை கலாய்த்துள்ளளார்.
மேலும் ஜிம்பாப்வே அதிபர் எம்மர்சன் மங்காக்வா பதிவிற்கு பாக்கிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீஃப் பதில் பதிவு போட்டுள்ளார்.”எங்களிடம் உண்மையான மிஸ்டர் பீன் இல்லாமல் இருக்கலாம், ஆனால் எங்களிடம் உண்மையான கிரிக்கெட் ஆர்வம் இருக்கிறது. திரும்பி மீண்டு வரும் கேளிகையான பழக்கம் பாகிஸ்தானியர்களிடம் உண்டு. வாழ்த்துக்கள், இன்று உங்கள் அணி நன்றாக விளையாடியது” என்று குறிப்பிட்டுள்ளார்.