ஈரோடு அன்னை சத்யா நகர் பகுதியைச் சேர்ந்த மாணிக் – மகாலட்சுமி தம்பதியினரின் 5 வயது மகன் சாய்சரண், வாழைப்பழம் சாப்பிட்டபோது மூச்சுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு, சிறுவன் சாய்சரண் வீட்டில் வாழைப்பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவன் திடீரென மூச்சுவிட சிரமப்பட்டுத் திணற ஆரம்பித்தான். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் சிறுவனை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்குச் சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவனின் மூச்சுக்குழாயில் வாழைப்பழத்தின் ஒரு பகுதி அடைத்திருப்பதாகக் கூறியுள்ளனர். மேலும், சிறுவனின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து, பெற்றோர்கள் பதற்றத்துடன் சிறுவனை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்குச் சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே சாய்சரண் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இந்தச் செய்தியைக் கேட்டுத் தாங்க முடியாத பெற்றோர் கதறி அழுதது அங்கிருந்தவர்களை உலுக்கியது. அதன் பின்னர், சிறுவனின் மூச்சுக்குழாயில் அடைத்திருந்த வாழைப்பழத்தை மருத்துவர்கள் அகற்றினர். இந்தத் துயரச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



