ஆந்திர மாநிலம் காக்கி நாடா பகுதியைச் சேர்ந்தவர் லீலா என்ற இளம்பெண். பட்டதாரியான இவர் பெங்களூருவில் முருகேஷ் பால்யா பகுதியில் உள்ள ஒமேகா கெல்த்கேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரும், டோம்லூரில் உள்ள லாஜிஸ் ஹெல்த் கேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தினகர் என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், காதல் விவகாரம் குறித்து லீலா தனது பெற்றோரிடம் தெரிவித்த போது, சாதியை காரணம் காட்டி திருமணத்திற்கு மறுத்து விட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்ந தினகர் சம்பவத்தன்று இரவு 7.30 மணியளவில் ஒமேகா ஹெல்த் கேர் அலுவலக வாயிலில் காத்திருந்தார். அப்போது, வேலையை முடித்துவிட்டு வெளியே வந்த லீலாவை தினகர் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த லீலா, கீழே சரிந்து விழுந்தார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதற்குள் தினகர் அங்கிருந்து தப்பித்து விட்டார். அதன் பின்னர் அவர்கள் லீலாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு லீலாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்த போலீசார், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தினகரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.