பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் எதிரொலியாக விருதுநகர் மாவட்டத்தில் கேன்களில் பெட்ரோல் விற்பனை செய்ய தடை விதித்து மாவட்ட கண்காணிப்பாளர் மனோகரன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கோவை, பொள்ளாச்சி, மதுரை, ராமநாதபுரம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பு, பாஜக நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த இரண்டு தினங்களாக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து உடனே இதை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், காவல்துறை சார்பில் இதுபோன்று சம்பவங்களில் ஈடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் ஏதும் நடைபெறாமல் உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதனை தடுக்கும் வகையில், விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் உள்ள பெட்ரோல் பங்குகளில் காவல்துறை சார்பாக அறிவிப்பு பலகை ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. அதில், வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் போட வேண்டும் என்றும் கேன்களில் சில்லறை வியாபாரம் செய்யக்கூடாது என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் உத்தரவின் பேரில் அந்தந்த பகுதி காவல் ஆய்வாளர் சார்பாக அறிவிப்பு பலகை என்பது ஒட்டப்பட்டுள்ளது.