என்னை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ரெகானா சித்ரவதை செய்வதாக அவரது தாயார், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கேரளாவில் சமூக ஆர்வலராக அறியப்படுபவர் ரெகானா பாத்திமா. சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது என்று பக்தர்கள் போராட்டம் நடத்திய நேரத்தில், கோவிலுக்கு சென்று பல்வேறு சர்ச்சையில் சிக்கியவர்தான் ரெகானா. அதன்பின்னர், மாட்டு இறைச்சி பற்றிய ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டார். மேலும், குழந்தைகளை வைத்து தனது அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைந்து சமூக ஊடகங்களில் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார். இந்நிலையில், ரெகானாவின் தாய் பியாரி காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், “என்னை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ரெகானா சித்ரவதை செய்ததாகவும், இந்த சித்ரவதையை தாங்க முடியாமல் வீட்டில் இருந்து வெளியேறி இரண்டு மாதங்களாக உறவினர் வீட்டில் தங்கி இருந்ததாகவும், தான் தங்கி இருக்கும் வீட்டில் இருப்பவர்களை ரெகானா மிரட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து ரெகானா பாத்திமாவை காவல் நிலையத்திற்கு அழைத்து எச்சரித்து அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.