கோவை கார் வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, நவம்பர் 19 ஆம் தேதி கர்நாடக மாநிலம் மங்களூருவில் சாலையில் சென்றுகொண்டிருந்த ஆட்டோ ஒன்றில் திடீரென குக்கர் குண்டு வெடித்தது. ஆட்டோவில் பயணித்த ஷாரிக்(24) என்ற நபரைப் பிடித்த போலீஸார் இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, ஷாரிக், வாட்ஸ்அப் டிபியில் ஈஷா மையத்தில் உள்ள ஆதியோகி சிலையின் படத்தை வைத்திருந்த செய்திகள் வெளியான நிலையில், தீபாவளி தினத்தன்று கோவை ஈஷா யோகா மையத்தில் மங்களூரு தாக்குதல் குற்றவாளி ஷாரிக்கை பார்த்ததாக கோவையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஆனந்தன் தெரிவித்துள்ளார். ஷாரிக் ஆதியோகி சிலையை புகைப்படம் எடுத்ததாகவும், அவருடன் மேலும் இருவர் இருந்ததாகவும் ஆனந்தன் தெரிவித்துள்ளார். கடந்த 24ம் தேதி ஷாரிக்கின் செல்போன் சிக்னல் கர்நாடகாவில் இருந்ததாக கூறப்படும் நிலையில், அன்றைய தினம் அவரை ஈஷா யோக மையத்தில் பார்த்ததாக ஆட்டோ ஓட்டுநர் கூறியுள்ளார். எனவே 24ம் தேதி பதிவான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
மங்களூரு ஆட்டோ வெடிகுண்டு தாக்குதல் விசாரணையை தேசிய புலனாய்வு விசாரணைக்கு மாற்ற கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக, மாநில உள்துறை அமைச்சர் அரகா ஜனேந்திரகுமார் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் மதுரையில் விசாரணை மேற்கொண்டனர். மதுரை டவுன்ஹால்ரோடு, கட்ராபாளையம் பகுதிகளில் தங்கும் விடுதிகள், உணவகங்களில் விசாரணை நடந்ததக் கூறப்படுகிறது.