நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாநிலங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. தென்கோடியில் உள்ள கேரளா தொடங்கி டெல்லி, இமாச்சலப் பிரதேசம் வரை கனமழை காரணமாக வெள்ளக்காடாக தத்தளித்து வருகிறது. இந்த கனமழையால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தான் கோவாவில் புதிய உத்தரவை அம்மாநில அரசு பிறப்பித்துள்ளது.
நாட்டிலேயே அதிக சுற்றுலாப் பயணிகள் குவியும் மாநிலங்களில் கோவாவும் ஒன்று. அங்கு பல்வேறு அருவிகள் உள்ளன. பருவமழை காரணமாக அருவிகளில் வெள்ள அபாயத்தை மீறி நீர்வரத்து உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரபல மைனாபி அருவியில் குளிக்க சென்ற இரண்டு சுற்றுலாப் பயணிகள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அதில் ஒருவர் 55 வயதான எல்ஐசி அதிகாரி ஜனார்தன் சதேகர். மற்றொருவர் 28 வயதான சிவ்தத் நாயக். இந்த இருவரின் கோர மரணத்தை தொடர்ந்து அம்மாநில வனத்துறை அமைச்சர் விஸ்வஜித் ரானே அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதாவது, மாநிலத்தில் உள்ள அருவிகள், வனவிலங்கு சரணாலயங்களுக்கு பர்வையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்கள் கழித்து நிலைமை சீரான பின்னர் இந்த தடை வாபஸ் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பருவமழை காலங்களில் இயற்கை எழில் கொஞ்சும் கோவாவிற்கு சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். இம்முறையும் ஆயிரக்கணக்கான பயணிகள் கோவாவை நோக்கி படையெடுத்துள்ளனர். இந்நிலையில், பருவமழை விபத்துக்கள் காரணமாக இதுவரை 5 பேர் கோவாவில் உயிரிழந்துள்ளனர். எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளத குறிப்பிடத்தக்கது.