PM MODI: 2024 ஆம் வருட பொது தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பரப்புரைகளை நிகழ்த்தி வருகின்றன. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால் அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களும் முழு தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் திமுக கூட்டணி அதிமுக கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள் போட்டியிடுவதோடு சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. தனது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள பாராளுமன்ற தொகுதிகளில் சீமான் தேர்தல் பரப்புரை செய்து வருகிறார் . இந்நிலையில் மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர் பாரதிய ஜனதா கட்சிக்கு(BJP) தனது எச்சரிக்கையை பதிவு செய்திருக்கிறார்.
மதுரையில் லோக்சபா தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக சத்யா தேவி போட்டியிடுகிறார் அவரை ஆதரித்து கே புதூர் பகுதியில் பிரச்சாரம் செய்த சீமான் ” பாஜகவின் அண்ணாமலை தனக்கு வேலை செய்வதாக தெரிவித்தார். இதை பிரதமர் மோடி கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் சீமான் தெரிவித்துள்ளார். தங்களது கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரித்து வந்த நிலையில் கமல்ஹாசன் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போன்ற கட்சிகள் நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதத்தை குறைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மோடியின்(PM MODI) நடிப்பு மற்ற மாநிலங்களில் ஈடுபட்டதை போல் தமிழ்நாட்டிலும் ஈடுபடாது என தெரிவித்த சீமான் நாங்கள் நடிகர் திலகம் சிவாஜி இடம் நடிப்பை கற்றவர்கள் என தெரிவித்தார். மோடி என்ன தான் நாடகமாடினாலும் அவர் நினைப்பது நடக்காது எனவும் கூறினார். மேலும் தமிழகத்தில் இருக்கும் திராவிட கட்சிகள் நமது பங்காளிகள். பங்காளி சண்டையை எப்போது வேண்டுமானாலும் தீர்த்துக் கொள்ளலாம் . ஆனால் காங்கிரஸ் மற்றும் பாஜக போன்ற கட்சிகளை தமிழகத்தில் வளர விடுவது மிகவும் ஆபத்தான விஷயம் என்றும் தெரிவித்தார். ஊழலற்ற ஆட்சி அமைவதற்கும் தமிழகத்தின் நலனுக்காகவும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.