தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் புதிதாக களம் காணும் தவெகவும் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. தவெக சார்பில் போட்டியிடும் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை சமீபத்தில் விஜய் அறிமுகம் செய்து வைத்தார்.
தவெக தலைவர் விஜய் இந்த தேர்தலில், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகுதியில் மார்ச் 30 ஆம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்த விஜய், அங்கு பிரச்சாரம் மேற்கொண்டார். பெரம்பூரைத் தொடர்ந்து கொளத்தூர் மற்றும் வில்லிவாக்கம் தொகுதிகளிலும் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, இதற்கான அனுமதியும் பெறப்பட்டது.
ஆனால், பெரம்பூரில் பிரச்சாரம் முடித்துக்கொண்டு கொளத்தூருக்கு செல்ல போதிய பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீரமைப்பு சரியாக மேற்கொள்ளப்படவில்லை என தவெக சார்பில் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது. கெளத்தூரில் பிரச்சாரம் மேற்கொண்ட விஜய் சில நிமிடங்களிலே பேச்சை முடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார். தொடர்ந்து வில்லிவாக்கம் பிரச்சாரமும் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் தவெக பிரச்சாரத்திற்கு போலீசார் ஒத்துழைப்பு வழங்கவில்லை. விஜயின் Y பிரிவு பாதுகாப்பில் சமரசம் செய்யப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தவெக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் ஓய் பிரிவு பாதுகாப்பில் உள்ளவரிடம் இருந்து 10 மீட்டர் தொலைவில் தான் தொண்டர்களை நிறுத்த வேண்டும். தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்ய முடியாத வகையில் சென்னை போலீசார் நடந்து கொள்கின்றனர். விஜய்க்கு விஐபி கான்வாய் பின்பற்றப்படுவதில்லை. பிரச்சாரம் செல்லும் இடத்தில் பெரிய பஸ்கள் வந்து இடையூறு செய்கின்றனர். தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்திற்கு மத்திய அமைச்சர் அமித்ஷா உதவ வேண்டும் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக தவெக தலைவர் விஜய் தரப்பில் அக்கட்சியின் நிர்வாகியான நிர்மல் குமார், தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு இது குறித்து புகார் கடிதம் அளித்திருந்தார். அந்தப் கடிதத்தில், முறையாக அனுமதி பெற்றும் பெரம்பூரில் இருந்து கொளத்தூருக்கு பிரச்சாரம் மேற்கொள்ள செல்ல முடியவில்லை என்றும், வழியில் போதிய காவல்துறை பாதுகாப்பு இல்லை என்றும், போக்குவரத்து சீரமைப்பும் இல்லை எனவே உடனடியாக தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.



