முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, உறவினரின் இறப்பு செய்தி அறிந்து அவசர அவசரமாக இருசக்கர வாகனத்தில் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்த ஊரான எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளையம் கிராமத்திற்குச் சென்றுள்ளார். அங்கு கோலாகலமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் தயாராக இருந்தன. இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமியின் உறவினரான பழனிசாமி என்பவர் உயிரிழந்துவிட்டதாக தகவல் கிடைத்தது. இதனால், எடப்பாடி பழனிசாமி பொங்கல் பண்டிகையை கொண்டாடவில்லை.
உடனே அங்கிருந்த பத்திரிகையாளர் ஒருவரின் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு இறந்த உறவினரின் வீட்டிற்கு சென்றுவிட்டார். அவரது உதவியாளர் ஸ்கூட்டியை இயக்க எடப்பாடி பழனிசாமி பின்னால் அமர்ந்து கொண்டு சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.