செங்கல்பட்டு மாவட்டத்தில் மின் கம்பம் சாய்ந்து உயிரிழந்த சிறுமியின் சடலம், மயானத்தில் புதைக்கப்பட்ட நிலையில், அங்கு அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அடுத்த சித்திரவாடியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது 12 வயது மகள் அங்குள்ள அரசுப் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 5ஆம் தேதி வழக்கம் போல பள்ளியில் இருந்து வீடு திரும்பிய இவர், அங்குள்ள குழந்தைகளுடன் வீட்டின் எதிரே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கிருந்த தெரு விளக்கை மாற்ற கலைச்செல்வன் என்பவர் மின் கம்பத்தின் மீது ஏறி இருக்கிறார். அந்த மின் கம்பம் ஏற்கனவே சேதமான நிலையில், இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கலைச்செல்வன் கம்பம் மீது ஏறிய போது, அந்த கம்பம் திடீரென சிறுமி மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த சிறுமி, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காகச் சென்னை அரசு பொது மருத்துவமனைக்குச் சிறுமி மாற்றப்பட்டார். அங்கு ஒரு வாரமாக அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதிலும், சிகிச்சை பலனின்றி 14ஆம் தேதி உயிரிழந்தார்.
இதையடுத்து பிரேதப் பரிசோதனை முடிந்து 15ஆம் தேதி சிறுமியின் உடல் சித்திரவாடி மயானத்தில் புதைக்கப்பட்டது. இந்நிலையில், சிறுமி புதைக்கப்பட்ட இடம் தோண்டப்பட்டு இருப்பதைப் பார்த்து அவ்வழியாகச் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிறுமி புதைக்கப்பட்ட இடத்தில் எலுமிச்சை பழம், மஞ்சள் தூள், குங்குமம் போன்ற பூஜை பொருட்களும் தலைமுடியும் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கிராமத்தினர், இது தொடர்பாகச் சிறுமியின் பெற்றோருக்குத் தகவல் அளித்துள்ளனர். அவர்கள் சித்தாமூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். சிறுமியின் தலையை மட்டும் சிலர் எடுத்துச் சென்றதாக அவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் முன்னிலையில் சிறுமி புதைக்கப்பட்ட இடத்தை தோண்டினர். அப்போது சிறுமியின் தலை மட்டும் இல்லாததைக் கண்டு அதிர்ச்சிடைந்தனர். இதையடுத்து, உடலைச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மறு பிரேதப் பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, சூரிய கிரகணத்தன்று இரவு மயானத்தில் பூஜை செய்து சிறுமியின் தலையை மர்ம நபர்கள் எடுத்துச் சென்று இருக்கலாம் என்று அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். அந்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.