85 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள், குறிப்பிட்ட குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் தபால் வாக்கு மூலம் தங்கள் வாக்குகளை செலுத்தலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பீகார் சட்டப்பேரவை தேர்தல், ஆறு மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்த விவரங்களை 2025 அக்டோபர் 06 அன்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் பிரிவு 60 (சி)-ன் படி 85 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள், குறிப்பிட்ட குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் தபால் வாக்கு மூலம் தங்கள் வாக்குகளை செலுத்தலாம்.
இந்த வாக்காளர்கள் இதற்கான வசதியை பெறுவதற்கு படிவம் 12டி-ஐ தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்ட 5 நாட்களுக்குள் தங்களது தொகுதி தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். வாக்குப்பதிவு மேற்கொள்ளும் குழுவினர் அவர்களுடைய இல்லங்களுக்கு சென்று வாக்குகளை சேகரிப்பார்கள். அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ள வாக்காளர்கள் தங்களுடைய துறையின் பொறுப்பு அதிகாரி மூலம் தபால் வாக்கு வசதியை பெற விண்ணப்பிக்கலாம்.
தீயணைப்பு, சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து, அவசர ஊர்தி சேவைகள், விமானப் போக்குவரத்து, தொலைதூர அரசு சாலைப் போக்குவரத்து கழகம் உள்ளிட்ட துறைகள் அத்தியாவசிய சேவைகளாகும்.வாக்குப்பதிவு நாளன்று செய்தி சேகரிப்பிற்காக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ள வாக்காளர்கள் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்கள் தபால் வாக்குப்பதிவு வசதியைப் பெற உரிமை பெற்றுள்ளனர். அத்தியாவசியப் பணிகளில் ஈடுபட்டுள்ள வாக்காளர்கள் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டவுடன் தங்களது தபால் வாக்குகளை மின்னணு வாயிலாக செலுத்தலாம். இந்த விதிமுறைகள் தொடர்பாக அரசியல் கட்சிகள் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விரிவாக விளக்குமாறு தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆகியோர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.