சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்து வரும் நிலையில், சவூதி அரேபியா ஆசிய நாடுகளுக்கான கச்சா எண்ணெய் விலை 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைத்துள்ளது. இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கில் போர் பதற்றம் தணிந்ததும், உலகளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் விநியோகம் அதிகரித்துள்ளது. இதுவே இந்த விலை மாற்றத்திற்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகிறது.
இந்தச் சூழலில், சவூதி அரேபியாவின் அரசுக்குச் சொந்தமான சவூதி அரம்கோ நிறுவனம், ஆசிய நாடுகளுக்கான ஆகஸ்ட் மாத கச்சா எண்ணெய் விநியோக விலையை குறிப்பிடத்தக்க அளவில் குறைத்துள்ளது. அதன் முக்கியமான அரப் லைட் கச்சா எண்ணெயின் அதிகாரப்பூர்வ விற்பனை விலை ( OSP) ஒரு பீப்பாய்க்கு 11 டாலர் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஓமன் மற்றும் துபாய் குறியீட்டு விலைகளை விட ஒரு பீப்பாய்க்கு 1.50 டாலர் தள்ளுபடி விலையில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது..
சந்தை ஆய்வாளர்களின் கருத்துப்படி, கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த விலை குறைப்பு, உலக சந்தையில் அதிகரித்துள்ள கச்சா எண்ணெய் விநியோகம் மற்றும் ஆசிய சந்தையில் தனது வர்த்தகப் பங்கைக் காப்பாற்றும் வகையில் சவூதி அரேபியா இதை செய்துள்ளது. சவூதி அரேபியா கச்சா எண்ணெய் விலையை குறைத்தாலும், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உடனடியாக குறையும் வாய்ப்பு குறைவாக இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில், சர்வதேச கச்சா எண்ணெய் விலை மட்டுமல்லாமல், இறக்குமதி ஒப்பந்தங்கள், சுத்திகரிப்பு செலவுகள், மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரிகள், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் எரிபொருள் விலையை நிர்ணயிக்கின்றன.இதனால், சர்வதேச சந்தை விலை சரிவின் பலன் இந்திய நுகர்வோருக்கு கிடைக்க சில வாரங்கள் முதல் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் வரைஆகலாம் என நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.
Also Read:சாக்லேட் சாப்பிட்டால் இதயத்திற்கு நல்லதா? உண்மை தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!



