சிறையிலிருந்து தப்பிச்சென்ற கைதியை பிடிக்க முயன்றபோது, நடந்த கலவரத்தில் பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் போலீஸாருக்கு, ஒரு கைதி சிறையிலிருந்து தப்பித்து உத்தரகாண்ட் மாநிலம், உத்தம் சிங் நகர் மாவட்டத்தின் பரத்பூர் கிராமத்துக்குள் நுழைந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, மொராதாபாத் போலீசார் அந்தக் கைதியைப் பிடித்துத் தருபவருக்கு ரூ.50,000 சன்மானம் தருவதாக அறிவித்தனர். மேலும், கைதியைத் தேடி பரத்பூர் கிராமத்துக்குள் போலீசார் நுழைந்தனர். ஆனால், போலீசார் கிராமத்துக்குள் நுழைவதைத் தடுத்த அந்த கிராம மக்கள் காவல்துறைக்கு எதிராகப் போராடத் தொடங்கினர்.

இதனால், காவல்துறைக்கும் கிராம மக்களுக்கு இடையே கலவரம் வெடித்தது. இதில், 5 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர். கிராம மக்களில் ஒரு பெண் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக மொராதாபாத் துணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டிஐஜி), ஷலப் மாத்தூர், “கைதி பரத்பூர் கிராமத்துக்கு தப்பிச் சென்றதாகத் தகவல் வந்ததைத் தொடர்ந்து ரூ.50,000 சன்மானம் அறிவித்துவிட்டு, அந்தக் கிராமத்துக்குச் சென்றோம். ஆனால், கிராம மக்கள் எங்களின் ஆயுதங்களைப் பிடுங்கி எங்களைத் தாக்கத் தொடங்கினர். இதில், காவல்துறையைச் சேர்ந்த 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சையில் உள்ளனர். மேலும், அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் உயிரிழந்துவிட்டார். இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.