திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து, உடலுறவு வைத்துக் கொண்ட பிறகு,
ஜாதக பொருத்தம் இல்லை என்ற காரணத்தை சொல்லி திருமணம் செய்ய மறுப்பது, ஏமாற்றி பாலியல் உறவு கொண்ட குற்றம் தான் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில், சம்மந்தப்பட்ட ஆணுக்கு “திருமணத்திற்கு எந்த தடையும் இல்லை; ஜாதகப் பொருத்தம் உட்பட எந்த பிரச்சனையும் இல்லை” என்று மீண்டும் மீண்டும் உறுதி அளித்து, ஒரு பெண்ணுடன் நீண்ட காலமாக உடல் உறவை வைத்திருந்தார் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. அவரது நடத்தை ஏமாற்றி பாலியல் உறவு கொள்ளுதல் என்ற குற்றத்திற்கு உட்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.
திருமண வாக்குறுதியால் வாபஸ்
நீதிபதி, 2025 நவம்பர் மாதத்தில் அந்த பெண் முதலில் புகார் அளித்ததாக குறிப்பிட்டார். ஆனால், குற்றம் சாட்டப்பட்ட ஆணும், அவரது குடும்பமும் திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்ததன் பேரில், அந்த புகார் வாபஸ் பெறப்பட்டது. பின்னர், ஜாதகங்கள் பொருந்தவில்லை என்ற காரணத்தை கூறி, திருமணத்தை மறுத்ததாகவும் நீதிமன்றம் பதிவு செய்தது.
குற்றம் சாட்டப்பட்ட ஆண், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.. மேலும் “ இது இருவரும் சம்மதத்துடன் நடந்த உறவு, இருவரும் 8 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள்.. திருமணம் செய்வதாக பொய் வாக்குறுதி அளித்து பலாத்காரம் செய்ததாக கூற முடியாது என்று வாதிட்டார். அவர், ஜனவரி 4 முதல் நீதிமன்றக் காவலில் இருந்துவருகிறார்.
நீதிமன்றம் மறுப்பு
ஆனால், குற்றம்சாட்ட நபரின் வாதத்தை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.. நீதிபதி பேசிய போது “இது வெறும் காதல் உறவு கசப்பாக முடிந்தது என்ற சாதாரண வழக்கு அல்ல. குடும்பம் ஜாதகப் பொருத்தம் அவசியம் என்று வலியுறுத்துவதை அறிந்தபடியே,
திருமணம் செய்வதாக மீண்டும் மீண்டும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.”என்று தெரிவித்தார்.’மேலும் “ஒரு உறவு தோல்வியடைந்ததற்காகவோ, திருமணம் நடைபெறாததற்காகவோ உடனே குற்றவியல் சட்டத்தை பயன்படுத்த முடியாது என்பது சரிதான். ஆனால், இவ்வழக்கு அந்த வகையைச் சேர்ந்தது அல்ல.” என்று தெளிவுபடுத்தினார்.
முன்னதாக, ‘ஜாதகப் பொருத்தம் பிரச்சனை இல்லை’ என்று கூறியபிறகு,
பின்னர் அதே ஜாதகப் பொருத்தம் இல்லை என்று சொல்லி திருமணம் மறுப்பது, திருமண வாக்குறுதியின் உண்மை தன்மையை சந்தேகிக்க வைக்கிறது
என்று நீதிபதி கூறினார்.
இந்த வகையான நடத்தை, பிரிவு 69-ன் கீழ் குற்றமாகும் என்றும் அவர் தெரிவித்தார். எனவே திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து, அதனை நம்பி உடலுறவு வைத்துக் கொண்ட பின்னர் ஜாதக காரணம் காட்டி திருமணம் செய்வதற்கு மறுப்பது, “ஏமாற்றி பாலியல் உறவு” குற்றத்திற்குள் வரும் என்றும், ஜாமீன் வழங்க முடியாது எனவும் டெல்லி உயர் நீதிமன்றம் தெளிவாகத் தீர்ப்பளித்துள்ளது.



