ஆவணி மாதம் சுபமுகூர்த்த தினமான நேற்று முன்தினம் ( 04.09.2025) வியாழக்கிழமை கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதன் மூலம் பதிவுத்துறை வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவில் அரசுக்கு ஒரே நாளில் ரூ.274.41 கோடி வருவாய் கிடைத்துள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து பத்திரப் பதிவுத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; ஆவணி மாதம் சுபமுகூர்த்த தினமான 04.09.2025 வியாழக்கிழமை அதிகளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு டோக்கன் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று 04.09.2025 ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும் அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்குபதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்களும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டது.
இதற்கு முன்னதாக 2025-26 ம் நிதியாண்டில் கடந்த 30.04.2025 அன்று ஒரே நாளில் பதிவுத்துறை வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவில் அரசுக்கு ரூ.272.32 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதே நிதியாண்டில் இதற்கும் அதிகமாக 04.09.2025 இதுவரையில் இல்லாத அளவில் அரசுக்கு ரூ.274.41 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு நாள் வருவாய் வசூலில் முதல் முறையாக 2025-26 ம் நிதியாண்டில் அதிக வசூல் செய்து புதிய மைல்கல்லை பதிவுத்துறை எட்டியுள்ளது என மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.