விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஜெயம் கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர்கள் சீனிவாசன்-தாய்ப்பால் தம்பதி. இவர்களுக்கு நாகமுத்து, தைமுத்து, மாரிமுத்து, வீரமுத்து என 4 மகன்கள். இதில், கடைசி மகன் வீரமுத்துவுக்கு அங்கம்மாள் என்கிற மனைவியும் இரண்டு வயதில் பெண் குழந்தையும் உள்ளது. சென்னையில் லாரி ஓட்டுனராக வேலை செய்து வந்த வீரமுத்து வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே கிராமத்திற்கு சென்று வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு இவர் சொந்த ஊரில் பைக்கில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் அவரை வழிமறித்து தலை மற்றும் கைகளில் சரமாரியாக வெட்டியதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தார்.
இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு செஞ்சி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி வீரமுத்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கொலை வழக்காக பதிவு செய்த செஞ்சி போலீசார், கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். முதற்கட்ட விசாரணையில் இந்த கொலை சம்பவத்தில் வீரமுத்துவுடன் கூட பிறந்த அண்ணன் மாரிமுத்து சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவரிடம் விசாரித்த போது தான், அண்ணி என்றும் பாராமல் தன் மனைவிக்கு வீரமுத்து தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தான். கூட பிறந்த தம்பியே இப்படி செய்கிறானே என்று ஆத்திரப்பட்டுத்தான் அவனை தீர்த்துவிட முடிவு செய்தேன். அதனால் தான் ஆட்களை வைத்து கொன்று விட்டேன் என்று கூறியிருக்கிறார். இதையடுத்து, அண்ணன் மாரிமுத்துவை போலீசார் கைது செய்தனர்.