விடுமுறையில் உள்ள ஊழியர்களை போன் செய்து தொந்தரவு செய்யும் சக ஊழியர்களுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என Dream 11 நிறுவனம் அறிவித்துள்ளது.
கொரோனா காலத்தில் வீட்டிலிருந்தே வேலை பார்த்ததால் ஊழியர்களின் வேலை நேரம், வாழ்க்கை, உறக்கம், உணவு என அனைத்தும் மாறிப்போனது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கமட்டுமல்ல வீட்டிலிருந்தே வேலைப்பார்ப்பதால் ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடனும் அதிக நேரம் செலவிட முடியும் என தனியார் நிறுவனங்கள் கருதின. 5 நாட்களில் செய்ய வேண்டிய வேலைகளை, ஊழியர்கள் 4 நாட்களுக்குள் செய்து முடிப்பார்கள் என்று கணக்கிடப்பட்டு இத்திட்டம் பல்வேறு துறை அலுவலகங்களில் செயல்படுத்தப்பட்டது. தற்போதும் சில அலுவலகங்கள் work from home விரும்பும் ஊழியர்களுக்கு அந்த சலுகைகளை அளித்து வருகிறது.
இந்நிலையில், விடுமுறை நாட்களில் உள்ள ஊழியர்களுக்கு டீம் லீடர்கள் ஏதாவது வேலை கொடுத்தாலோ அல்லது வேலை தொடர்பாக அவர்களிடம் டவுட் கேட்டாலோ அந்த நபருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என Dream 11 அறிவித்துள்ளது. விடுமுறை நாட்களில் வேலை தொடர்பான அழைப்புகள், இ-மெயில் வாட்ஸ் ஆப் மெசேஜ் அனுப்புவதால் ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடவோ அல்லது ஓய்வெடுக்கவோ முடியவில்லை என கருத்தில் கொண்டு அந்த நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. UNPLUG என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம் ஊழியர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக Dream 11 தெரிவித்துள்ளது.