ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருவதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது…
இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய உள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர் “ ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ள இங்கே வந்திருக்கிறோம்.. ஈரோட்டின் மைந்தராக இருக்கக்கூடியவர் தான் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்..
எப்போதுமே, தந்தை இறந்து அவரின் இடத்தை பூர்த்தி செய்ய மகன் வருவார்.. ஆனால் இங்கு மகன் இறந்து, அவரின் இடத்தை நிரப்ப தந்தை வந்திருக்கிறார்.. இது யாருக்கும் ஏற்படக்கூடாத சூழ்நிலை… இதை எல்லாம் புரிந்து கொண்டு, மக்கள் மாபெரும் வெற்றியை தர வேண்டும்.. திமுக ஆட்சி பொறுப்பேற்று இந்த 2 ஆண்டுகாலத்தில் செய்துள்ள சாதனைகளை பற்றி சொன்னால், அதற்கு நேரம் போதாது..
சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் ஸ்டாலின் செய்வான் என்பதற்கு பல உதாரணங்களை காட்ட முடியும்.. ஆட்சி பொறுப்பேற்ற உடன், மகளிருக்கு அரசு பேருந்துகளில் இலவச பயண திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.. மேலும் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை நிறைவேற்றி இருக்கிறோம்.. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி வருகிறோம்.. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம், இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், நான் முதல்வன் போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்..
அனைத்து சாதியினரும் அர்ச்சகராலாம் திட்டம், அன்னை தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம், மாவட்டந்தோறூம் புத்தக கண்காட்சிகள், கோவில் நிலங்கள் மீட்கப்படுகின்றன, தமிழ் பரப்புரை கழகம், போதை பொருள் ஒழிப்பு, ஆன்லைன் ரம்மி ஒழிப்பு சட்டம், அரசு பள்ளிகளில் படித்து கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமை பெண் திட்டன் என எத்தனையோ திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம்..
ஆனால் எதிர்க்கட்சி தலைவர், திமுக ஆட்சிக்கு வந்து எதையும் செய்யவில்லை என்று கூறி வருகிறோம்.. நாங்கள் செய்ததை ஆதாரத்தோடு சொன்னேன்.. எதிர்க்கட்சி தலைவருக்கு கண்களுக்கு இது தெரியவில்லை என்றால், கண் டாக்டரை பார்த்து கண்ணாடியை போட்டுக்கொண்டு, இதை எல்லாம் படித்து பாருங்கள்.. நான் பேசுவதையாவது கேட்டு பாருங்கள்.. ஆக, 85% பணிகளை நிறைவேற்றி இருக்கிறோம்.. இந்த ஆண்டுக்குள் எல்லா பணிகளை நிறைவேற்றி காட்டுவோம்..
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று சொன்னோம்.. கடந்த ஆட்சியாளர்கள் நிதி நிலைமை சரியாக வைத்துவிட்டு சென்றிருந்தால், அதையும் நிறைவேற்றி இருப்போம்.. கொள்ளையடித்துவிட்டு போனார்கள்.. கஜானாவை காலியாக்கிவிட்டு, கடனையும் வைத்து சென்றுள்ளார்கள்.. அதை எல்லாம் சரி செய்து வருகிறோம்.. வரும் மார்ச் மாதம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.. அந்த நிதிநிலை அறிக்கையில் பெண்களுக்கு உரிமைத்தொகை ரூ.1000 எப்போது வழங்கப்படும் என்பதை அறிவிக்க உள்ளோம்.. இது ஸ்டாலின் சொல்லும் வார்த்தை.. எடப்பாடி சொல்லும் வார்த்தை இல்லை.. இது மக்களுக்காக பாடுபடும் ஆட்சி… எனவே அதிமுக வேட்பாளர் டெபாசிட் இழக்கும் அளவுக்கு உங்கள் ஆதரவு இருக்க வேண்டும்.. ” என்று தெரிவித்தார்..