வரி போர்களுக்கு மத்தியில், ரஷ்யாவிற்கும் – இந்தியாவிற்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் டிசம்பரில் இந்தியாவுக்கு வருகை தருவார் என்று அதிபர் மாளிகை கிரெம்ளின் உறுதிப்படுத்தியது.
சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நாளை மற்றும் 1-ம் தேதி என 2 நாட்கள் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உள்பட உலக தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டை தொடர்ந்து ரஷிய அதிபரை பிரதமர் மோடி சந்தித்துப் பேசுகிறார். இந்த தகவலை கிரெம்ளின் மாளிகையின் வெளிநாட்டு கொள்கை ஆலோசகர் யுரி உஷா கோவ் உறுதிப்படுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘ஒன்றாம் தேதி ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு சந்திப்புக்குப் பின் உடனடியாக எங்கள் அதிபர் (புதின்) மற்றும் இந்திய பிரதமர் மோடி இடையேயான சந்திப்பு நடக்கிறது’ என்று கூறினார். மேலும் அவர் கூறும்போது, இதில் முக்கியமானது என்னவென்றால், வரும் டிசம்பரில் நமது அதிபரின் இந்திய பயணத்துக்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிவித்தார். இதன்மூலம் ரஷிய அதிபர் புதின் இந்த ஆண்டு இறுதியில் இந்தியா வருவதும் உறுதியாகி உள்ளது.



