சட்டப்பேரவை அறிவிப்பை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மணிவிழா கண்ட 70 வயது பூர்த்தி அடைந்த ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ள 2000 தம்பதியர்களுக்கு சிறப்பு செய்ய ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் மணி விழா கண்ட 70 வயது பூர்த்தியடைந்த ஆன்மிக ஈடுபாடு உள்ள 100 தம்பதிகளுக்கு சிறப்பு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. ரூ.2,500 மதிப்பில் புடவை, வேட்டி சட்டை, மாலை, பூ, மஞ்சள் குங்குமம், மஞ்சள் கயிறு, வாழைப்பழம் உட்பட 11 பொருட்கள் வழங்கப்பட உள்ளன. 20 இணை ஆணையர் மண்டலங்களில் தலா 100 தம்பதிகள் வீதம் 2,000 தம்பதிகள் சிறப்பிக்கப்படவுள்ளனர்.
இது குறித்து அறநிலையத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் மணி விழா கண்ட 70 வயது பூர்த்தியடைந்த ஆன்மிக ஈடுபாடு உள்ள 100 தம்பதியர்கள் வீதம் 20 இணை ஆணையர் மண்டலங்களில் 2000 தம்பதியருக்கு திருக்கோயில்கள் சார்பில் சிறப்பு செய்யப்படும். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் ஒவ்வொரு இணை ஆணையர் மண்டலத்திலும் 70 வயது பூர்த்தியடைந்த ஆன்மிக ஈடுபாடு உள்ள 100 தம்பதியர்களுக்கு திருக்கோயில்கள் மூலம் ரூ.2,500 மதிப்பில் புடவை, வேட்டி சட்டை, மாலை, பூ, மஞ்சள் குங்குமம், மஞ்சள் கயிறு, வாழைப்பழம் உட்பட 11 பொருட்கள் வழங்கி சிறப்பு செய்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
இச்செலவினை இயன்றவரை உபயதாரர் மூலமும், உபயதாரர் கிடைக்கப்பெறாத நிலையில் திருக்கோயில் நிதி மூலமும் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இத்திட்டத்தினை பொது மக்களுக்கு அறிவிக்கும் வகையில் திருக்கோயில்களில் விளம்பர பதாகைகள் அமைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும், இப்பணிகளை கண்காணித்து சட்டமன்ற அறிவிப்பின்படி நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை எய்திட தொடர்புடைய மண்டல இணை ஆணையர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.