தமிழ்நாட்டில் வரும் 27, 28ஆம் தேதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் 26ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் வரும் 27, 28ஆம் தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக வழக்கத்தை விட அதிகமாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இன்று காலை 8 மணி வரை மூடு பணி நிலவியதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால், முகப்பு விளக்கை எரியவிட்டு வாகனங்கள் ஊர்ந்து சென்றன. சென்னை போலவே பிற மவட்டங்களிலும் அதிகாலையில் கடும் பனி நிலவி வருகிறது. இதற்கிடையே, அடுத்து வரும் சில தினங்களுக்கு பனிமூட்டம் தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனால் வரும் நாட்களிலும் இதே போன்ற சூழல் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் காலை மற்றும் மதிய வேலையில் வெப்பநிலை 2-3 டிகிரி அதிகமாக இருக்கும் என்பதால், வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. வெயிலில் செல்லும் மக்கள் கவனத்துடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.