ஜெர்மனை சேர்ந்த பிரபல ஐடி நிறுவனமான எஸ்ஏபி (சேப்) நிறுவனம் 3,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். இதனால், உலகளவில் முன்னணி நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, அமேசான், ட்விட்டர், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் பணிநீக்க அறிவிப்புகளை சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில், சர்வதேச அளவில் மிகப் பெரிய ஐடி நிறுவனமான எஸ்ஏபி (சேப்) நிறுவனம் 3,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்த நிறுவனத்தில் மொத்தம் 1,20,000 ஊழியர்கள் வேலைபார்த்து வருகின்றனர். இதில் 3,000 ஊழியர்களுக்கு வேலை பறிபோக வாய்ப்பு உள்ளது.
இந்த பணிநீக்க திட்டம் குறித்து இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம். அதன் ஒரு பகுதியாக இந்த பணி நீக்கத்தை திட்டமிட்டுள்ளோம். மேலும், நிறுவனத்தின் அடிப்படை தொழில்களில் அதிக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளோம். இந்த மறுசீரமைப்பு மூலம் 300 முதல் 350 மில்லியன் யூரோக்களை வரும் ஆண்டில் சேமிக்க முடியும். இதை நிறுவனத்தின் முதலீட்டு நடவடிக்கைக்கு பயன்படுத்த முடியும்” என்று தெரிவித்துள்ளது.