பாகிஸ்தானை சேர்ந்த பெண் சீமா ஹைதர் (30). இவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர். பப்ஜி கேம் விளையாடுவதில், மிகுந்த ஆர்வம் கொண்ட சீமாவுக்கு, அதன் மூலம் உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த சச்சின் (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து, சீமா தனது 4 குழந்தைகளுடன் பாகிஸ்தான் எல்லையைத் தாண்டி நேபாளம் வழியாக இந்தியா வந்தார்.
பின்னர், சச்சினும் சீமாவும் 4 குழந்தைகளுடன் கிரேட்டர் நொய்டாவில் வாடகை வீட்டில் வசித்துள்ளனர். இந்தியாவில் சட்டவிரோதமாக நுழைந்து வசித்து வந்த சீமா மற்றும் அவரது 4 குழந்தைகளையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அதேவேளையில் தான் சச்சினை காதலிப்பதாகவும் பாகிஸ்தான் செல்ல விருப்பம் இல்லை என்றும் இந்தியாவிலேயே தங்களை சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்றும் சீமா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சீமா ஹைதரை பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பவில்லை என்றால் 26/11 மும்பை தாக்குதல் போன்று மற்றொரு தாக்குதல் நடத்த நேரிடும் என்ற மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட நபர், சீமா ஹைதர் பாகிஸ்தானுக்கு திரும்பவில்லை என்றால் மும்பை தாக்குதல் போன்று மற்றொரு தாக்குதல் நடத்தப்பட்டும். இந்த தாக்குதலுக்கு உத்தரப்பிரதேசம், மராட்டிய அரசுகளே காரணம் என்று அந்த நபர் உருது மொழியில் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த மிரட்டல் விடுத்தது யார்? பாகிஸ்தானை சேர்ந்த யாரேனும் இந்த மிரட்டல் விடுத்தனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.