தனித் தமிழ்நாடு கேட்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வலியுறுத்தி உள்ளார்.
சென்னையில் திருமாவின் சிந்தனை கோட்பாடுகள் என்ற நூல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதில், திருமாவளவன் பங்கேற்று பேசிய பேச்சுதான் பெரும் சர்ச்சையாகி உள்ளது. இந்நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், ”பதவி, அதிகாரம், பொருள் ஈட்டுதலுக்கான வாய்ப்புதான் அரசியல் என்கிற உணர்வை கட்டமைத்துள்ளனர். அரசியல் கட்சிகளில் கொள்கை, கோட்பாடுகளை அலசி ஆராய்ந்து விவாதிப்பவர்கள் எண்ணிக்கை மிக குறைவுதான். அவர்கள்தான் கட்சிகளின் முக்கிய பொறுப்புகளில் வழிநடத்துகின்றனர். நாங்கள் சொல்கிற அடங்கமறு! அத்துமீறு! திருப்பி அடி! என்பது ஒரு செயல் திட்டம்தான். இது வன்முறை முழக்கம் அல்ல. தமிழ்நாடு எனும் தனிநாடு அமைப்பதுதான் தமிழ்த் தேசியத்தின் இறுதி இலக்காகும். நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் மொழி வழி தேசியம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அத்தகைய மொழிவழித் தேசியங்களின் ஒன்றியமாகத்தான் மத்திய அரசு இருக்க வேண்டும். அது மாநிலங்களின் ஒன்றியம் என்பதற்கு அப்பால், தேசிய இனங்களின் ஒன்றியம் என்பதாக இருத்தல் அவசியம்” என பேசியிருந்தார்.

திருமாவளவனின் இந்தப் பேச்சுக்கு இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியத் திருநாட்டின் ஒற்றுமைக்கு, இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தமிழ் தேசியத்தின் கடைசி இலக்கு என்பது தனித் தமிழ்நாடுதான் என விஷ விதையை திருமாவளவன் தூவியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் எடுத்துக் கொண்ட திருமாவளவன், இறையாண்மையை கேலிக் கூத்தாக்கும் வகையிலும் தனித் தமிழ்நாடு எனும் பிரிவினையை பேசி இந்திய அரசியலமைப்பின் மீது தனக்கு இல்லாதது போல பேசியுள்ளார். ஆகையால், திருமாவளவனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்” என வலியுறுத்தினார்.

அதேபோல் பாஜகவின் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில், ”ஒரத்த நாடு, வருச நாடு, பாப்பா நாடு, முறப்ப நாடு என்பது போல் தமிழ்நாடு என்பது ஒரு மாநிலத்தின் பெயர் மட்டுமே. தனிநாடு என்று பிரிவினைவாதம் பேசுபவர்களுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்பது மட்டுமே தேசியவாதிகளின் ஒரே இலக்காக இருக்கிறது” என விமர்சித்திருந்தார். பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், “தனித் தமிழ்நாட்டை வெட்டி எடுப்பது தான் தமிழ் தேசியத்தின் இறுதி இலக்கு என்று பேசியுள்ள தேசவிரோதி தீயசக்தி திருமாவளவனை உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.